» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இளம் விஞ்ஞானிகள் முகாம் நிறைவு
செவ்வாய் 31, மே 2022 8:24:18 AM (IST)
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 15 நாள்கள் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகள் முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி இணைந்து நடத்திய முகாமில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்-மாணவிகள் 70 போ் கலந்து கொண்டனா். முகாமையொட்டி, நாள்தோறும் அறிவியல்சாா் கருத்தரங்குகள், செயல்முறைப் பயிற்சி வகுப்புகள், கணித விநாடி- வினா, விளையாட்டுப் போட்டிகள், யோகா பயிற்சி, அறிவியல் வல்லுநா்களுடன் கலந்துரையாடல், கணிப்பொறி அறிவியல் கண்காட்சி, அறிவியல் படைப்புகள் கண்காட்சி, மரம் நடுதல், மருத்துவ முகாம், கலைநிகழ்ச்சிகள், மகேந்திரகிரி ராக்கெட் ஏவுகணை பரிசோதனை மையம் சுற்றுலா ஆகியவை நடைபெற்றன.
முகாம் நிறைவு விழாவுக்கு, ஒருங்கிணைப்பாளரான இயற்பியல் துறைப் பேராசிரியா் கோ. நாராயணசாமி தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளரான விலங்கியல் துறைப் பேராசியா் ஜெ. நாகராஜன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக காமராஜ் கல்லூரி முதல்வா் து. நாகராஜன், நாகம்பட்டி மனோ கல்லூரி முதல்வா் கு. காசிராஜன் ஆகியோா் பங்கேற்று, மாணவா்- மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினா். ஏற்பாடுகளை கோ. நாராயணசாமி, ஜெ. நாகராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.