» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ருதுராஜ் அரை சதம் வீண்: சிஎஸ்கேவை வீழ்த்திய பஞ்சாப் ஸ்பின்னர்கள்!!

வியாழன் 2, மே 2024 10:14:10 AM (IST)



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ரகானே, கேப்டன் ருதுராஜ் இணைந்து சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவரில் 64 ரன் சேர்த்தது. 

ரகானே 29 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த ஷிவம் துபே சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார். ஜடேஜா 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, சென்னை அணி 9.5 ஓவரில் 70 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ருதுராஜ் சமீர் ரிஸ்வி ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.

இருவரும் 4வது விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்தனர். ரிஸ்வி 21 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் ஹர்ஷல் வசம் பிடிபட்டார். அடுத்து ருதுராஜ் – மொயீன் அலி இணைந்து 38 ரன் சேர்த்தனர். ருதுராஜ் 44 பந்தில் அரை சதம் அடித்தார். ருதுராஜ் 62 ரன் (48 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), மொயீன் அலி 15 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 

எம்.எஸ்.தோனி 14 ரன் விளாசி கடைசி பந்தில் ரன் அவுட்டாக, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. மிட்செல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சில் ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் தலா 2, ரபாடா, அர்ஷ்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது.

அந்த அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பேர்ஸ்டோ அதிகபட்சமாக 46 ரன் (30 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். ரோஸ்சவ் 43 ரன் எடுத்தார். சென்னை பந்துவீச்சில் தாக்கூர், க்ளீசன், ஷிவம் துபே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பஞ்சாப் கிங்ஸ் 10 போட்டியில் 4வது வெற்றியை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 10 போட்டியில் 5வது தோல்வியை சந்தித்தது.

பஞ்சாப் கிங்ஸின் வெற்றிக்கு சுழற் பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணமாக விளங்கினர். ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சஹார் வீசிய 8 ஓவர்களை ஓவர்களில் இருவரும் 19 டாட் பால்களை வீசியதோடு ஒரு பவுண்டரியைக் கூட அடிக்க விடவில்லை. இருவரும் 33 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிஎஸ்கேவை கட்டுப்படுத்தினர். மொத்தத்தில் சிஎஸ்கேவை ஸ்பின்னர்களின் ஓவர்கள் காலி செய்தன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory