» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக்கோப்பை தொடருக்கு அஸ்வினுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது : ரோகித் சர்மா

திங்கள் 18, செப்டம்பர் 2023 11:25:57 AM (IST)

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாக அஸ்வினுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என கேப்டன்  ரோகித் சர்மா கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 8வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஏற்கனவே 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளிலும் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது. அதிக முறை ஆசிய கோப்பையை ருசித்த அணியாக இந்தியா வலம் வருகிறது. இதற்கு அடுத்தபடியாக இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பையை வென்று இருக்கின்றன.

இதையடுத்து இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும், இதையடுத்து 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் ஆட உள்ளது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் அக்சர் படேல் ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்ததால் இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பிடித்ததோடு நேரடியாக களம் இறக்கப்பட்டார்.

இந்நிலையில், உலகக்கோப்பைக்கு முன்பாக அக்சர் படேல் காயத்திலிருந்து குணமடையாமல் போகும் பட்சத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி ஆசிய கோப்பை வென்ற பின் அவர் பேசியது பின்வருமாறு.,

சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களை பொறுத்த வரை அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இதைப் பற்றி அஸ்வினிடம் தொலைபேசியில் நேரடியாக பேசியுள்ளேன். எனவே அவரும் இந்திய அணியில் தேர்வு செய்வதற்கான வரிசையில் இருக்கிறார். அதே போல் வாஷிங்டன் சுந்தரும் இருக்கிறார். குறிப்பாக நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் அசத்துபவர்களை விரும்புகிறோம்.

அக்சர் படேல் திடீரென காயத்தை சந்தித்ததால் நாங்கள் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்தோம். பெங்களூருவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக பயிற்சியில் இருந்த அவர் பிட்டாக இருப்பதால் நாங்கள் உடனடியாக அழைத்தோம். இவ்வாறு அவர் கூறினார். உலகக்கோப்பை தொடருக்கான அணியில் வரும் 28ம் தேதி வரை ஐசிசி-யிடம் அனுமதி பெறாமல் மாற்றம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory