» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசியக் கோப்பை கிரிக்கெட் இலங்கை த்ரில் வெற்றி: பாகிஸ்தானை வெளியேற்றியது!!
வெள்ளி 15, செப்டம்பர் 2023 10:44:01 AM (IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்றைய போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மழையினால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் குவித்தது. ரிஸ்வான் -86*, இஃப்திகார்-47.
253 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அதிரடியாக தொடங்கியது. 3.2ஒவரில் ஷதாப் கானின் அற்புதமான ஃபீல்டிங்லின் மூலம் குசால் பெராரே (17 ரன்) ரன் அவுட் ஆகினார். 13.2 வது ஓவரை வீசிய ஷதாப் கான் ஓவரில் பௌலரிடமே கேட்ச் கொடுத்து 29 ரன்களில் ஆட்டமிழந்தார் நிசாங்கா. குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமாக விளையாடினார்கள்.
இஃப்திகார் ஓவரில் 29.4இல் சதீரா சமரவிக்ரமா 48 ரன்னில் ஆட்டமிழக்க மீண்டும் அவர் வீசிய 34.6வது பந்தில் அற்புதமான கேட்ச் பிடித்தார் ஹாரிஸ். இதன்மூலம் 91 ரன்களில் குசால் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். மீண்டும் இஃப்திகார் வீசிய 37.4 ஓவரில் கேப்டன் ஷானகா ஆட்டமிழந்தார்.
41வது ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டத்தை திருப்பினார். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவையான போது அசலங்கா இறுதிப் பந்தில் வெற்றிக்கான 2 ரன்களை எடுத்து அசத்தினார். அசலங்கா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
எளிமையாக வெற்றியடைய வேண்டிய இலங்கை தட்டு தடுமாறி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் கடைசிவரை போராடி தோற்றது. இஃப்திகார் அஹமது 3 விக்கெட்டுகளும் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இலங்கை அணி 12வது முறையாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை (செப்.17) நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் இலங்கை அணி மோதவுள்ளது. கடைசியாக நடந்த ஆசிய கோப்பையை இலங்கை அணி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.