» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலகக் கோப்பை கிரிக்கெட்: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
செவ்வாய் 5, செப்டம்பர் 2023 4:17:47 PM (IST)
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை செப்.5-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) காலக்கெடு விதித்திருந்தது. இந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் சூழலில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.
ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.