» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அயர்லாந்து டி20 தொடர்: இந்திய அணி கேப்டனாக பும்ரா நியமனம்!
புதன் 2, ஆகஸ்ட் 2023 12:19:19 PM (IST)
அயர்லாந்து அணியுடன் டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணிக்கு, வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. டப்ளின் மலாஹைடு மைதானத்தில் ஆக. 18, 20, 23 தேதிகளில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்த நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, முழு உடல்தகுதியுடன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதுடன் கேப்டன் பொறுப்பையும் ஏற்க உள்ளார். ருதுராஜ் கெயிக்வாட் துணை கேப்டனாக செயல்படுவார். ஐபிஎல் தொடரில் அசத்திய ரிங்கு சிங், ஷிவம் துபே, ஜிதேஷ் ஷர்மா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து தொடருக்கான இந்திய டி20 அணி: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட் (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.