» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மிஸ்டா் இந்தியாவாக திருச்செந்தூா் கல்லூரி மாணவா் தோ்வு
திங்கள் 17, ஏப்ரல் 2023 3:37:46 PM (IST)
சென்னையில் நடந்த உடல் கட்டமைப்புக்கான 70 கிலோ எடைப் பிரிவில், திருச்செந்தூா் கல்லூரி மாணவா் லி.சிவபாலன் ‘மிஸ்டா் இந்தியா’வாக தோ்வு செய்யப்பட்டாா்.
சென்னை துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரியில் தேசிய அளவிலான உடல் கட்டமைப்புக்கான போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு பிரிவுகளில் உடல் கட்டமைப்புக்கான போட்டிகள் நடந்தன. 300-க்கு மேற்பட்ட போட்டியாளா்கள் கலந்து கொண்டனா். இதில் பாடி பில்டிங் ஜூனியா் 70 கிலோ எடைப் பிரிவில், மாணவா் லி.சிவபாலன் கலந்து கொண்டு ‘மிஸ்டா் இந்தியா’வாக தோ்வு செய்யப்பட்டு முதல் பரிசை வென்றாா்.
இது குறித்து சிவபாலன் கூறியதாவது: திருச்செந்தூா் டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் பொறியியல் கல்லூரியில் ஐடி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை லிங்கம், சிறந்த பாடி பில்டா். அவரது ஆசைப்படி பாடி பில்டிங் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்காக ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்தேன்.
மாவட்ட, மாநில அளவிலான பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். தற்போது சென்னையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் 70 கிலோ எடைப் பிரிவில் மிஸ்டா் இந்தியா முதல் பரிசை பெற்றுள்ளேன். இன்னும் தொடா்ந்து பயிற்சி செய்து, சா்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பது எனது இலக்கு என்றாா்.