» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுகவின் 8000 ரூபாய் கூப்பன் மோசடியால் இளம்பெண் தற்கொலை: விஜய் குற்றச்சாட்டு!

புதன் 15, ஏப்ரல் 2026 4:53:13 PM (IST)



திருச்சியில் திமுகவினர் வழங்கியதாகக் கூறப்படும் பரிசு கூப்பன் விவகாரத்தில், ஆபாச வசவுகளால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று பரிசு கூப்பன்களை விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த சிந்துஜா என்ற இளம்பெண்ணின் வீட்டிற்கு கூப்பன் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து சிந்துஜா திமுகவினரிடம் கேட்டபோது, அவர்கள் அவரை ஆபாசமாகப் பேசி, தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிந்துஜா, நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: "திமுகவின் 8,000 ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. மக்களை ஏமாற்றுவதையே கடமையாகக் கொண்டுள்ள திமுக, 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற தோல்வி பயத்தில் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது. இது திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி."

தொடர்ந்து தனது பதிவில் திமுக அரசை நோக்கிப் பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்:

"சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா?"

"உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்ற இது என்ன இரிடியம் விற்பனையா?"

"திமுகவினரின் ஆபாச வசவுகளால் ஒரு பெண் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?"

தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை: இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், மக்களை ஏமாற்றும் இத்தகைய 'சதுரங்க வேட்டை' மோசடிகளைத் தேர்தல் ஆணையம் தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் விஜய் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory