» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜகவின் புதிய கல்விக் கொள்கையில் தமிழக அரசு ஆர்வம் : சீமான் கண்டனம்

ஞாயிறு 17, மார்ச் 2024 11:55:41 AM (IST)

பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றி ‘ஸ்ரீ பள்ளிகளை’ தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. 

தேசிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழ்நாட்டில் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், தற்போது மெல்ல மெல்ல பாஜகவின் புதிய கல்விக் கொள்கையை நுழைப்பது தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் கொடுஞ்செயலாகும்.

புதிய கல்விக்கொள்கையின் அனைத்து கூறுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த மோடி அரசால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளி திட்டம்தான் ஸ்ரீ பள்ளிகளாகும். அதனை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவித்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திமுக அரசு புதிதாக குழு அமைத்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

பொதுப்பட்டியலிலுள்ள கல்வியை, ஒன்றியப்பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு ஒற்றை மயத்தையும், காவிக்கொள்கையையும் திணிக்கும் பொருட்டு மோடி அரசால், எதேச்சதிகாரப்போக்கோடு உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றெனக் கூறி, புதிதாக மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்க கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்தது திமுக அரசு. 

ஆனால் ஓராண்டுக்குள் தேசியக் கல்விக்கொள்கைக்கு சாதகமாக மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கப்படுவதாக குற்றம் சுமத்தி, அக்குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர் நேசன் விலகியது திமுக அரசு உருவாக்கவுள்ள கல்விக் கொள்கையின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாக்கியது.

அதனைத் தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கையின் கூறான இல்லம் தேடிக்கல்வியை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியதும், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி எனும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை நியமனம் செய்ததும், பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை விமர்சித்ததற்காக ஆசிரியர் உமாமகேசுவரியை அண்மையில் பணி இடைநீக்கம் செய்து தண்டித்ததும் திமுக அரசின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியது.

இந்திய ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை ஏற்க நினைக்கும் திமுக அரசின் கொள்கை நிலைப்பாடும், நிர்வாகச் செயல்பாடும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல; திராவிட ஆட்சியின் மூலவரான அறிஞர் அண்ணாவுக்கே செய்யும் கொடுந்துரோகமாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் திமுக அரசு இனியாவது தனது தவற்றை உணர்ந்து, பாஜகவின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்கும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, சமூகநீதி அடிப்படையில் தனித்துவமிக்க மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

தலைமைMar 17, 2024 - 02:38:53 PM | Posted IP 172.7*****

புதிய கல்விக் கொள்கை என்றால் என்ன என்று தெரியாது, ஆனால் கோமாளித்தனமாக உளற தெரியும். முதலில் புதிய கல்விக் கொள்கை பற்றி புள்ளி விவரம் நல்ல உதவியாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டு பேசவும்........அரசு எந்த விஷயம் செய்தாலும் முட்டாள்தனமாக எதிர்ப்பது தான் இந்த மிஷனரிகள் வேலை.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory