» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்விரோதத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை - 3 பேர் வெறிச்செயல்!

ஞாயிறு 17, மார்ச் 2024 9:30:24 AM (IST)

களக்காடு அருகே முன்விரோதத்தில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அண்ணனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பெருமாள்குளத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவருடைய மகன்கள் ஜான்சன் (வயது 30), ஆல்பர்ட் ஜெயக்குமார் (23). அந்த பகுதியில் ஜான்சன் பீடி கடை நடத்தி வருகிறார். ஆல்பர்ட் ஜெயக்குமார் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கோயில்ராஜிக்கும், துரைராஜ் மகன் சம்பத்ராஜாவுக்கும் (35) இடையே லோடு ஆட்டோ வைத்து தொழில் நடத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதுதொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், கோயில்ராஜ், சம்பத்ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் கோயில்ராஜிக்கு ஆதரவாக ஜான்சன் செயல்பட்டதுடன், அவரை ஜாமீனில் எடுப்பதற்கும் உதவி செய்தார். இதனால் ஜான்சன் மீது சம்பத்ராஜா ஆத்திரத்தில் இருந்தார். பின்னர் பெருமாள்குளத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதற்கு ஜான்சன் தரப்பினர் ஆதரவாக இருந்தனர். ஆனால், சம்பத்ராஜா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த முன்விரோதத்தில் ஜான்சன் குடும்பத்தினரைப் பற்றி சம்பத்ராஜா தரப்பினர் ‘வாட்ஸ்-அப்’ மூலம் அவதூறான கருத்துகளை பரப்பியதாக கூறப்படுகிறது. இதனை ஆல்பர்ட் ஜெயக்குமார் தட்டி கேட்டார். நேற்று முன்தினம் மதியம் ஜான்சனும், அவருடைய தம்பி ஆல்பர்ட் ஜெயக்குமாரும் பீடிக்கடை அருகில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சம்பத்ராஜா, அவருடைய உறவினர்களான சேகர் மகன் டாலி (25), மற்றொரு ஜான்சன் மகன் பிரைட்சன் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஜான்சன், அவருடைய தம்பி ஆல்பர்ட் ஜெயக்குமார் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இரும்பு கம்பியாலும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஜான்சன், ஆல்பர்ட் ஜெயக்குமார் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். சம்பத்ராஜா உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த ஜான்சன், ஆல்பர்ட் ஜெயக்குமார் ஆகியோரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் ஆல்பர்ட் ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார். ஜான்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சம்பத்ராஜா, டாலி, பிரைட்சன் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். களக்காடு அருகே முன்விரோதத்தில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory