» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சொத்து வரி செலுத்துவதில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விலக்கு: அரசாணை வெளியீடு!
புதன் 13, மார்ச் 2024 10:38:12 AM (IST)
முன்னாள் படை வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்.19-ஆம் தேதி நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பேசுகையில், "கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் வரிச் சலுகை, அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கு விரிவுபடுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு விதித்துள்ள நிபந்தனைகள்:
முன்னாள் படை வீரர் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக வேண்டும். முன்னாள் படை வீரர் குடியிருக்கும் கட்டடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும். வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.ராணுவ பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்கக்கூடாது.
மறுவேலைப்பில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் படை வீரர்கள் பயனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.