» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு : சிதம்பரம், விழுப்புரத்தில் போட்டி
வெள்ளி 8, மார்ச் 2024 4:30:03 PM (IST)
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது திமுக. அதன்படி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது. அதன்படி, திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதிமுகவை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், அண்ணா அறிவாலயம் வந்து தொகுதி பங்கீடு உடன்படிக்கை செய்தார். தொகுதிப் பங்கீட்டில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் கையெழுத்திட்டனர். அதன்படி, திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 3 தொகுதிகள் கேட்ட நிலையில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த 2019 தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விசிக போட்டியிட்ட நிலையில் மீண்டும் இதே தொகுதிகள் இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தனித் தொகுதிகளில் விசிக போட்டியிடும். 2019-ல் கையாளப்பட்ட பகிர்வு முறை இத்தேர்தலிலும் நடந்துள்ளது. விசிக, 2 தனித் தொகுதி ஒரு பொதுத் தொகுதி வலியுறுத்தியது. எனினும், அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு 2019-ல் கையாளப்பட்ட பகிர்வு முறைக்கு ஒப்புதல் தெரிவித்தோம்.
தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம். பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக உடன்பாடு தெரிவித்துள்ளது. எல்லா சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு தான் 2 தொகுதிகளில் போட்டி என்பதில் உடன்பட்டுள்ளோம். வேட்பாளர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
saamyMar 8, 2024 - 09:48:38 PM | Posted IP 172.7*****