» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சொத்து வழிக்காட்டி மதிப்பு சுற்றறிக்கை ரத்து : தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை
வெள்ளி 16, பிப்ரவரி 2024 8:18:17 AM (IST)
சொத்து வழிக்காட்டி மதிப்பை நிர்ணயம் செய்தது தொடர்பான சுற்றறிக்கையை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க பத்திரப்பதிவுத் துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக் குழு செயல்பட்டு வருகிறது. 2023-24-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையில், சொத்துக்களின் விலை அதிகரித்துள்ளதால் வழிக்காட்டி மதிப்பீட்டை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மதிப்பீட்டுக் குழு வழிக்காட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால், தற்காலிக நடவடிக்கையாக 2017-ம் ஆண்டு ஜூன் 8-ந்தேதி வரை அமலில் இருந்த வழிக்காட்டி மதிப்பீடு அடிப்படையில் மதிப்பீடு நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 2017-ம் ஆண்டு அமலில் இருந்த வழிக்காட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், புதிய மதிப்பீட்டை நிர்ணயித்து 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என 2023-ம் ஆண்டு மார்ச் 30-ந்தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, அந்த அறிவிப்பை ரத்து செய்தார். விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, சுற்றறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வுசெய்து, பொதுமக்கள் கருத்துகளை பெற்று அதன்பிறகே வழிக்காட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, கட்டுமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.