» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாலிபரை கீழே தள்ளி மிதித்ததாக போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
வெள்ளி 16, பிப்ரவரி 2024 8:14:57 AM (IST)
தென்காசி பஸ் நிலையத்தில் வாலிபரை தாக்கி கீழே தள்ளி மிதித்ததாக போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை வழிமறித்து போலீசார் விசாரித்தனர்.
இதில், அவர்கள் தென்காசி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அபி என்ற அன்ஸ்டன் (வயது 25), அவருடைய நண்பரான முகமது காசிம் உள்ளிட்ட 3 பேர் என்பதும், அவர்கள் மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அபி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர், ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு ரோந்து வாகனத்தில் வந்த போலீசார், அபியிடம் தகராறு செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். பறிமுதல் செய்த அபியின் மோட்டார் சைக்கிளை போலீசார், போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அபி, தென்காசி பஸ் நிலைய வளாகத்தில் ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் அழகுதுரையிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவதூறாக பேசி தகராறு செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் அழகுதுரை, அபியை தாக்கி, கீழே தள்ளி காலால் அவரது நெஞ்சில் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே, தென்காசி பஸ் நிலையத்தில் அபியை போலீஸ்காரர் அழகுதுரை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தென்காசி மாவட்ட எஸ்.பி., சுரேஷ்குமார் விசாரணை நடத்தி, போலீஸ்காரர் அழகுதுரையை பணி இடைநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.