» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் ரூ.4.5 கோடி கல்விக் கடன் : ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்
வியாழன் 15, பிப்ரவரி 2024 5:34:14 PM (IST)
குமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் முகாமில் ரூ.4.5 கோடி மதிப்பில் கல்லூரி மாணவ மாணவியர்களின் மேற்படிப்பிற்கு கடனுதவியினை ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாமானது நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் இன்று (15.02.2024) நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு கடனுதவிகள் வழங்கி பேசுகையில்:
தமிழ்நாடு அரசானது பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அரசுப்பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்று, மேற்படிப்பு செல்பவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதோடு, மேற்படிப்பிற்கு எந்த பாடப்பிரிவினை தேர்ந்தெடுக்கலாம் என்ற வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் இன்று நடைபெற்று வரும் கல்விக்கடன் முகாமின் நோக்கமானது 12ம் வகுப்பு முடித்து, மேற்படிப்பிற்காக கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கல்வி பயில செல்லும் மாணவ மாணவியர்களின் நலனுக்கே ஆகும். மேலும் கடந்த ஜீன் மாதம் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பொறியியல் மற்றும் செவிலியர் படிப்பிற்கான கல்விக்கடன் முகாமில் சுமார் ரூ.5 கோடி அதிகமான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற 2ம் கட்ட கல்விக்கடன் முகாமில் மேற்படிப்பு பயிலும் 70 மாணவ மாணவியர்களுக்கு இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் மூலமாக ரூ.4.5 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே மாணவ மாணவியர்கள் கடனுதவிகளை பெற்று மேற்படிப்பினை நன்கு பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென பேசினார்.
இம்முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவின் குமார், மகளிர் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் உஷா, வங்கியாளர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.