» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாகக் குடிநீரின்றித் தவிக்கும் கிராம மக்கள்: அதிகாரிகள் அலட்சியம்!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:41:01 PM (IST)

epmWaterIssue.jpg

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எட்டயபுரம் அருகே உள்ள குமாரட்டியாபுரம் கிராமத்தில், கடந்த 15 ஆண்டுகளாகக் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், பலமுறை மனு அளித்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

300-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி, எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் என அனைத்துத் தரப்பினரிடமும் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் புறக்கணிப்பு, சுதந்திர தின விழா புறக்கணிப்பு அல்லது சாலை மறியல் போன்ற போராட்டங்களை அறிவிக்கும் போது மட்டும், வட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு 2 அல்லது 3 நாட்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அதன்பின் மீண்டும் பழைய நிலையே தொடர்வதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் கிராமத்தில் உள்ள கண்மாய் மற்றும் கிணற்றைத் தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆழ்துளைக் கிணறு மூலம் பெறப்படும் தண்ணீர் கடும் உப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடன் இருப்பதால் அதைக் குடிக்கப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

பெரும்பாலும் விவசாயத்தைச் சார்ந்த வாழும் இக்கிராம மக்கள், விவசாயப் பொய்ப்பால் போதிய வருமானமின்றி விலைக்குத் தண்ணீர் வாங்கிப் பருக முடியாத சூழலில் தவிக்கின்றனர்.

கிராமத்தின் மேற்குப் பகுதியில் 400 மீட்டர் தொலைவில் செல்லும் கோவில்பட்டி - நாலக்கம்பட்டி கூட்டுக் குடிநீர் குழாயில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை, மக்கள் கப்புகளில் பிடித்துக் குடங்களில் ஊற்றிப் பயன்படுத்தி வருகின்றனர். பெண்கள் மற்றும் ஆண்கள் தள்ளுவண்டிகளிலும், கைகளிலும் குடங்களைச் சுமந்து கொண்டு சென்று தண்ணீர் எடுத்து வரும் பரிதாப நிலை நீடிக்கிறது.

அதேபோல, சீவலப்பேரி - அருப்புக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் இருந்தோ அல்லது நாலக்கம்பட்டி குடிநீர் இணைப்பில் இருந்தோ தங்கள் கிராமத்திற்கு இணைப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

epmWaterIssu1e.jpg

குடிநீர் தொடர்பாக மனு அளித்தால், அதிகாரிகள் கீழ்நிலை ஊழியர்களுக்குப் பரிந்துரைப்பதும், அவர்கள் "கிராமத்திற்குத் தண்ணீர் செல்கிறது" எனப் பொய் அறிக்கை அளித்துத் தப்பிப்பதையுமே வழக்கமாகக் கொண்டுள்ளனர். சில நேரங்களில் 'குமாரட்டியாபுரம்' என்ற கிராமமே இல்லை எனக் கூறுவதாகவும், அதேவேளையில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை மட்டும் அரசு சரியாக வசூலித்துக் கொள்வதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, தமிழக அரசும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் தலையிட்டுத் தங்களின் 15 ஆண்டுகாலக் குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads








Thoothukudi Business Directory