» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் விவகாரத்தில் இளம்பெண் அடித்துக் கொலை : தற்கொலை நாடகமாடிய தாய், அண்ணன் கைது!

வியாழன் 11, ஜூன் 2026 8:38:39 AM (IST)



கயத்தாறு அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, சமூக வலைத்தளக் காதலைக் கண்டித்து, அண்ணனே தங்கையைக் கொலை செய்து விட்டுத் தற்கொலை நாடகமாடியதும், அதற்குத் தாய் உடந்தையாக இருந்ததும் அம்பலமானதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் எல்லைக்குட்பட்ட தெற்கு மயிலோடை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் பாலின் (36). இவருடைய 18 வயது மகள் கடந்த 9ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்டமாகச் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வழக்கில் கயத்தாறு போலீசார் மற்றும் தனிப்படையினர் மேற்கொண்ட தொடர் புலன் விசாரணை, உயிரிழந்த இளம்பெண்ணின் உடற்கூறாய்வு மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் இருந்து கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், அப்பெண்ணின் மரணத்தில் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதற்கான தடயங்கள் உடற்கூறாய்வு அறிக்கையில் முரண்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்த இளம்பெண்ணின் தாய் எஸ்தர் பாலின் மற்றும் அவரது அண்ணனான சிவஞானம் (20) ஆகிய இருவரையும் போலீசார் காவல் அரணுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

போலீசாரின் விசாரணையின் போது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய சிவஞானம் மற்றும் எஸ்தர் பாலின் ஆகிய இருவரும் இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டனர். விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி விபரங்கள் வருமாறு: உயிரிழந்த 18 வயது இளம்பெண், சமூக வலைத்தளம் மூலமாகச் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி, தீவிரக் காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விபரத்தை அறிந்த அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணின் காதலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கண்டித்துள்ளனர்.

சம்பவத்தன்று இது தொடர்பாக வீட்டில் மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அண்ணன் சிவஞானம், தனது தங்கை என்றும் பாராமல் அப்பெண்ணை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், இந்தக் கொலையை மறைத்துச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகத் தாய் எஸ்தர் பாலினின் முழு உடந்தையுடன், இளம்பெண்ணின் சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உறவினர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர் என்பது விசாரணையில் அக்குவேறு ஆணிவேறாக அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, சந்தேக மரண வழக்கை உடனடியாகக் கொலை வழக்காக மாற்றம் செய்த கயத்தாறு போலீசார், இளம்பெண்ணைக் கொலை செய்த அவரது அண்ணன் சிவஞானம் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்து தற்கொலை நாடகமாடிய தாய் எஸ்தர் பாலின் ஆகிய இருவரையும் நேற்று உடனடியாக அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory