» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!

செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக் கோரி, தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அறிவித்திருந்த தேர்தல் புறக்கணிப்பு குறித்த சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கிராம மக்கள் தங்களது முடிவில் உறுதியாக உள்ளனர்.

பொட்டலூரணி ஊரைச் சுற்றி அமைந்துள்ள, கடும் துர்நாற்றம் வீசும் மூன்று கழிவுமீன் நிறுவனங்களை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது பொதுமக்களின் முதன்மைக் கோரிக்கையாக உள்ளது. அத்துடன்:    அரசு மற்றும் தனியார் இடைநில்லாப் பேருந்துகளின் இயக்கத்தை முறைப்படுத்துதல்.    இதர அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாகத் தலைமைத் தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்ட 22 அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஏற்கனவே மனு அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் அரசுத் தரப்பில் தூத்துக்குடி ஊரக உட்கோட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதிர், திருவைகுண்டம் வட்டாட்சியர் ஜாகிர் அகமது ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் தரப்பில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தலைமையில் சண்முகம், இராதாகிருஷ்ணன், ஈஸ்டர் அந்தோணிராஜ், இராமகிருஷ்ணன், பாலமுருகன், மாரியப்பன், செந்தட்டி, மஹாராஜன் மற்றும் விஜி ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையின் போது, கழிவுமீன் நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது அவற்றை உடனடியாக மூட வாய்ப்பில்லை என்றும் கோட்டாட்சியர் தெரிவித்தார். மற்ற கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

இருப்பினும், இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் தரப்பு "இந்த நிறுவனங்களை இயக்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கூட இன்னும் வகுக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது இவை இயங்குவது சட்டவிரோதமானது. எனவே, அவற்றை உடனடியாக மூடினால் மட்டுமே தேர்தலில் வாக்களிப்போம்; இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடரும்." எனத்தெரிவித்தனர்.

இந்த பிடிவாதமான முடிவால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தேர்தல் நெருங்கும் வேளையில், ஒரு கிராமமே புறக்கணிப்பில் உறுதியாக இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory