» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக நலனுக்காக போராடும் உங்கள் வீட்டுப் போர் வீரன் நான்: பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முழக்கம்!

செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:47:24 AM (IST)



"தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் போராடும் உங்கள் வீட்டுப் போர் வீரனாக நான் இருப்பேன் என்று" என்று சாயர்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி எம்.பி பேசினார்.

தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, தூத்துக்குடி மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களான கீதா ஜீவன் (தூத்துக்குடி), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ராமஜெயம் (ஓட்டப்பிடாரம்) மற்றும் கருணாநிதி (கோவில்பட்டி) ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசியதாவது: தமிழகத்தின் வரலாற்றைப் பாதுகாத்த தலைவர்கள் இருந்த அதிமுக இப்போது இல்லை. அது இறந்துவிட்டது. இப்போது இருப்பது வெறும் வெற்று அமைப்புதான். ஊழல் புகார்களால் அதன் தலைவர்கள் பாஜகவிடம் சரணடைந்துவிட்டனர்.

தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் மொழியை நசுக்க பாஜக நினைக்கிறது. பீகாரைப் போலத் தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மோடி அரசு முயற்சிக்கிறது. ஆனால், தமிழக மக்கள் ஒருபோதும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் மோடியிடம் பணிந்து போகமாட்டார். இது சமூக நீதியை நிலைநாட்ட விரும்பும் சக்திகளுக்கும், அதைச் சிதைக்க நினைக்கும் சக்திகளுக்கும் இடையிலான கொள்கைப் போர்.

தமிழகம் இந்தியாவின் சமூக நீதிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. காமராஜர் வழியில் கல்வியிலும், சமூக மேம்பாட்டிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. என் பாட்டி, தந்தை காலத்திலிருந்தே தமிழக மக்களின் மீது எங்களுக்கு ஒரு தனிப்பற்று உண்டு. டெல்லியில் தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் போராடும் உங்கள் வீட்டுப் போர் வீரனாக நான் இருப்பேன் என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory