» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 231 வழக்குகள் – முன்னெச்சரிக்கையாக 347 பேர் மீது நடவடிக்கை!

வியாழன் 9, ஏப்ரல் 2026 8:30:00 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக இதுவரை அரசியல் கட்சியினர் மீது 231 வழக்குகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 347 பேர் மீதும் மாவட்டத் தேர்தல் நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுவர் விளம்பரங்களை அழிக்காதது மற்றும் அனுமதி இன்றி பதாகைகள் வைத்தது தொடர்பாக 184 வழக்குகளும், சமூக வலைதள விதிமீறல் தொடர்பாக 4 வழக்குகளும், உரிய ஆவணமின்றி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு சென்றதாக 44 வழக்குகளும் என மொத்தம் 231 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கட்சி வாரியாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்:

திமுக: 54

அதிமுக: 39

தவெக: 36

விசிக: 19

பாஜக: 12

அமமுக: 10

நாம் தமிழர்: 8

புதிய தமிழகம்: 8

காங்கிரஸ்: 2

மதிமுக: 2

தேமுதிக: 1

347 பேர் மீது பிணைப்பத்திரம்: 

தேர்தல் நேரத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புள்ள நபர்களைக் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 1,868 வாக்குச்சாவடிகளில் 246 சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.

இப்பகுதிகளைச் சேர்ந்த 347 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் உதவி ஆட்சியர் முன்னிலையில் நன்னடத்தை பிணைப்பத்திரம் (Bond) தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 596 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிடிவாரண்ட் குற்றவாளிகள் கைது: 

பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2,075 பேரை போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory