» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித்திருவிழா: இரட்டை திருப்பதியில் சாத்துமுறை வைபவம் கோலாகலம்

புதன் 11, மார்ச் 2026 8:31:03 AM (IST)



ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, நம்மாழ்வார் முன்னிலையில் இரட்டை திருப்பதியில் சாத்துமுறை வைபவம் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில், கடந்த மாதம் 26-ஆம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் மார்ச் 6-ஆம் தேதியும், தெப்பத்திருவிழா மார்ச் 7 மற்றும் 8-ஆம் தேதிகளிலும் நடைபெற்றன. கடந்த 9-ஆம் தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

பழங்கால நடைமுறைப்படி, மார்கழி அத்யயன உற்சவத்தின் போது ஸ்ரீரங்கத்திலிருந்து நம்மாழ்வார் எழுந்தருளி சாத்துமுறை நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மாசித் திருவிழா முடிந்த மறுநாள் நம்மாழ்வார் இரட்டை திருப்பதிக்கு எழுந்தருளி சாத்துமுறை நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று அதிகாலை 5 மணிக்கு நம்மாழ்வார் விஸ்வரூபம் மற்றும் நித்யல் கோஷ்டி நடைபெற்றது. காலை 7:50 மணிக்கு ஆழ்வார்திருநகரியிலிருந்து புறப்பட்ட நம்மாழ்வார், இரட்டை திருப்பதி சென்றடைந்தார். அங்கு மாலை 4 மணிக்கு தேவர்பிரான், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக நம்மாழ்வாருடன் மண்டபத்தில் எழுந்தருளினார்.

நம்மாழ்வார் முன்னிலையில் தேவர்பிரான் சாத்துமுறை வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்குத் தீர்த்தம், சடாரி மற்றும் துளசி பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு நம்மாழ்வார் மீண்டும் ஆழ்வார்திருநகரிக்கு வந்தடைந்தார்.

இந்த நிகழ்வில் எம்பெருமானார் ஜீயர், ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர், சந்தானம், வாசு, கஸ்தூரி ரங்கன், கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, நிர்வாக அதிகாரி சதீஷ், ஆய்வாளர் நம்பி மற்றும் அர்ச்சகர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory