» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஞ்ச் டயலாக்' பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள்: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் சாடல்!

சனி 7, மார்ச் 2026 11:01:49 AM (IST)



இயக்குநர்கள் எழுதிக் கொடுக்கும் 'பஞ்ச் டயலாக்'களைப் பேசி சாத்தியமற்ற வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார். 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி சண்முகபுரம் பகுதி திமுக சார்பில் தேரடி சந்திப்பில் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு பொறுப்பாளர் சக்திவேல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது தமிழ்நாடு கடும் கொரோனா நெருக்கடியில் இருந்தது. முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, போதிய திட்டமிடல் இன்றி தொழில்களையும் மக்களையும் முடக்கிப் போட்டிருந்தது. அந்த இக்கட்டான சூழலில், வெளிமாநிலங்களில் இருந்து இரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வந்து, மக்களின் உயிரைக் காத்தவர் நமது முதலமைச்சர்.

கவச உடை அணிந்து கொரோனா வார்டுகளுக்கே நேரடியாகச் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறிய இந்தியாவிலேயே ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். பாதிப்பு குறைந்த பிறகு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4,000 ரூபாய் நிவாரணம் வழங்கி ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தார்."

திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், இதுவரை 4,000 திருக்கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்து முதலமைச்சர் சாதனை படைத்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் மட்டும் 210 புதிய மின்மாற்றிகள் மற்றும் 13 துணை நிலை மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட கால குடிநீர் தட்டுப்பாடும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் மட்டும் மதத்தை கையில் எடுத்துக்கொண்டு சில கட்சிகள் வலம் வருகின்றன. மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் களத்தில் நிற்காமல் ஓடி ஒளிந்தவர்கள், இப்போது மேடை போட்டுப் பேசுகிறார்கள். குறிப்பாகச் சிலர், இயக்குநர்கள் எழுதிக் கொடுக்கும் 'பஞ்ச் டயலாக்'களைப் பேசி அரசியலில் வலம் வருகிறார்கள். அனுபவமின்றி, சாத்தியமற்ற வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இதில் எந்த அர்த்தமும் இல்லை.

"கீழடி உள்ளிட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட்டு, தமிழர்களின் நாகரிக வரலாற்றை மறைக்கப் பார்க்கிறது. பெரும் நிறுவனங்களின் கோடிக்கணக்கான கடன்களைத் தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு, சாமானிய மக்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுக்கிறது. வரும் தேர்தல் என்பது தமிழ்நாடு அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையிலான போர்," என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர துணைச் செயலாளர் கீதா முருகேசன், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் சரத் பாலா, இருதயராஜ், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள், மாணவரணி, மருத்துவர் அணி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் முரளிதரன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory