» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் அவதார பதியில் அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா கோலாகலம்!
வியாழன் 5, மார்ச் 2026 8:00:43 AM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில், அய்யாவின் 194-வது அவதார தின விழா பல்வேறு சிறப்பு வழிபாடுகளுடன் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சிறப்புப் பணிவிடைகள் தொடங்கின. உகப்படிப்பு மற்றும் காலை நேர அன்னதர்மம் நடைபெற்றது. நண்பகலில் உச்சிபடிப்பு பணிவிடைக்குப் பிறகு, மாலையில் அய்யா புஷ்ப வாகனத்தில் பவனியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து திருஏடு வாசிப்பு, சிறுவர்-சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இரவு சிவச்சந்திரன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
முக்கிய நிகழ்வான நேற்று புதன்கிழமை அதிகாலை முதலே வழிபாடுகள் களைகட்டின. அதிகாலை தாலாட்டு பாடுதல் மற்றும் பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சூரிய உதயத்தின் போது, பக்தர்கள் திரளாகச் சூழ்ந்து நிற்க, கடல் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வரும் வைபவம் நடைபெற்றது. பின்னர் அய்யாவுக்குச் சிறப்புப் பணிவிடைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு இனிமம் மற்றும் அன்னதர்மம் வழங்கப்பட்டது.
விழாவில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தினர். விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் கோபால் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)

டிசிடபிள்யூ நிறுவனத்தில் 55-வது தேசிய பாதுகாப்பு தின விழா
வியாழன் 5, மார்ச் 2026 8:07:30 AM (IST)

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை
புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)

தூத்துக்குடி வருகை தரும் துணை முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் முடிவு?
புதன் 4, மார்ச் 2026 8:08:03 PM (IST)









