» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடமாடும் உழவர் சந்தை வாகனங்கள் : ஆட்சியர் க. இளம்பகவத் துவக்கி வைத்தார்!

திங்கள் 2, மார்ச் 2026 4:09:10 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக, விவசாயிகளின் விளைபொருட்களை நேரடியாக நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 8 நடமாடும் உழவர் சந்தை மின்சார வாகனங்களை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்ய உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. என்.டி.பி.எல் (NTPL) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) பங்களிப்புடன், சுமார் ரூ. 36.28 லட்சம் மதிப்பீட்டில் 8 மூன்று சக்கர மின்சார ஆட்டோக்கள் இதற்காக வழங்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி உழவர் சந்தைக்கு ஆறு ஆட்டோக்களும், கோவில்பட்டி உழவர் சந்தைக்கு இரண்டு ஆட்டோக்களும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில்,  62 வருவாய் கிராமங்கள், கயத்தார்  வட்டாரத்தில், 33 வருவாய் கிராமங்கள், ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில், 57 வருவாய் கிராமங்கள், கோவில்பட்டி வட்டாரத்தில் 32 வருவாய் கிராமங்கள் பயனடையும். இந்த 8 வாகனங்களில், தூத்துக்குடி உழவர் சந்தைக்கு 6 ஆட்டோக்களும், கோவில்பட்டி உழவர் சந்தைக்கு 2 ஆட்டோக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்ததாவது:    "இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது தோட்டத்து விளைபொருட்களை நேரடியாக மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும். இதனால் நுகர்வோருக்குப் பசுமையான காய்கறிகள் குறைந்த விலையில் கிடைப்பதுடன், ஒரு விவசாயி நாளொன்றுக்குக் கூடுதலாக ரூ. 1000 வரை வருமானம் ஈட்ட வாய்ப்பு உருவாகியுள்ளது. விவசாயிகளைத் தொழில்முனைவோராக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்."

இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் க. கிருஷ்ணகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சௌ. மனோரஞ்சிதம், என்.டி.பி.எல் பொது மேலாளர் டி.ஏ. அரவிந்த்ராஜா, வேளாண் வணிகத் துணை இயக்குநர் சுதாமதி, விற்பனைக்குழுச் செயலாளர் ப. எழில் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory