» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழிவு ஆயிலால் தார்ச்சாலையா? தட்டிக்கேட்ட கிராம மக்களுக்கு மிரட்டல்!

திங்கள் 2, மார்ச் 2026 12:35:27 PM (IST)


விளாத்திகுளம் அருகே தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதை தட்டிக்கேட்ட கிராம மக்களை, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவோம் என மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீரங்கபுரம் முதல் நூத்தலக்கரை சின்னையாபுரம் கிராமம் வரை, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 3.200 கிலோமீட்டர் தூரத்திற்கு தார்ச் சாலை மற்றும் ஒரு பாலம் அமைப்பதற்காக ரூபாய் 146.76 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்தச் சாலைப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என அக்கிராம மக்கள் அடுக்கடுக்கான புகார்களை முன்வைக்கின்றனர்: சாலை அமைக்கும்போது தரமான தார் கலவையைப் பயன்படுத்தாமல், பழைய கழிவு ஆயிலுடன் ஜல்லிக் கற்களைக் கலந்து சாலை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாலக் கட்டுமானப் பணிகளில் சிமெண்ட் கலவைக்குப் பதிலாக, தரமற்ற முறையில் சுண்ணாம்பு கலவையைப் பயன்படுத்தியதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புதிதாகப் போடப்பட்ட தார்ச் சாலை ஒரு அங்குலத்திற்கும் குறைவான கனத்திலேயே உள்ளது. கைகளால் தொட்டாலே போர்வை போலப் பெயர்ந்து வருவதாகவும், வெறும் கருப்பு நிற மண்ணாகக் கையில் ஒட்டுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து ஒப்பந்ததாரரிடமும், அரசுப் பொறியாளரிடமும் கிராம மக்கள் நியாயம் கேட்டுள்ளனர். 

பணிகளை முறையாகச் செய்யும்படி கோரிக்கை விடுத்தபோது, அதற்குப் பதிலளிக்க மறுத்த அதிகாரிகள், "ஒழுங்காகப் போகிறீர்களா? இல்லை போலீஸிடம் உங்களைப் பிடித்துக் கொடுத்துவிடவா?" என்று ஒருமையில் பேசி மிரட்டியதாகக் கூறப்படுகிறது."கிராமப் பகுதிகளுக்கு அரசுத் திட்டங்கள் வருவதே பெரும் கனவாக உள்ளது. அவ்வாறு வரும் திட்டங்களும் முறையாக மக்களைச் சென்றடைவதில்லை. தரமற்ற சாலைகளால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது," என அக்கிராம மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

விதிமுறைகளை மீறி தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மற்றும் கிராம மக்களை மிரட்டிய பொறியாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட சாலையை உடனடியாக மறுசீரமைப்பு செய்து தர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory