» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் மத்திய அரசைக் கண்டித்து மறியல் போராட்டம்: 140 பேர் கைது

வியாழன் 12, பிப்ரவரி 2026 3:47:10 PM (IST)



திருச்செந்தூரில் மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உட்பட 140 பேரை போலீசார் கைது செய்தனர். 

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து, பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளர்களைப் பாதிக்கும் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும். விவசாயத்தை அழிக்கும் விதை மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றாமல், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். அணுசக்தி துறையைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். 

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களைப் பாதுகாக்க, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஒரு சதவீத நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செந்தூர் தியாகி பகத்சிங் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து இந்தப் பேரணி தொடங்கியது. 

அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற போராட்டக்காரர்கள், பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பி. லோகநாதன், சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. பேச்சிமுத்து, எல்பிஎஃப் நிர்வாகி கிறிஸ்டின் கெனிஸ்டின், ஏஐசிசிடியு நிர்வாகி எம். முருகன், எம்எல்எஃப் நிர்வாகி மாரிமுத்து மற்றும் ஐஎன்டியுசி செயலாளர் பி.எஸ். முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மேலும் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் ஏ. பாலகிருஷ்ணன், எஸ். பன்னீர்செல்வம், முத்துக்குமார், எல்எல்எஃப் நிர்வாகி வடிவேல்முத்து, மாற்றுத்திறனாளி சங்க மாவட்டச் செயலாளர் ஜெபஸ்டின் ராஜ், சிஐடியு நிர்வாகிகள் குன்னிமலையான், நிக்சன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் டி. ஹெமா, சிபிஎம் உடன்குடி ஒன்றியச் செயலாளர் கந்தசாமி மற்றும் சாத்தான்குளம் ஒன்றியச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

மறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உட்பட மொத்தம் 140 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தால் திருச்செந்தூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory