» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பசுமை தாமிர ஆலை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வியாழன் 12, பிப்ரவரி 2026 7:51:58 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்த வளாகத்தில், 'பசுமை தாமிர உற்பத்தி ஆலை' அமைக்க அனுமதி கோரிய வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22-ல் நடைபெற்ற போராட்டத்தின் போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்குத் தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் 2020-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் பசுமை தாமிர உற்பத்தி ஆலையால் சுற்றுச்சூழலுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. ஸ்டெர்லைட் வளாகத்தில் இந்த புதிய ஆலையைத் தொடங்க அனுமதி கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி ரத்து செய்தது சட்டவிரோதமானது.

மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட வல்லுநர்கள் அடங்கிய பன்னோக்கு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது..

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

வேதாந்தா தரப்பு வாதம்: "எங்கள் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கு முன்பாக எங்களுடைய தரப்பு கருத்துகளைக் கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு வழங்காதது சட்டப்படி செல்லாது. எனவே, தொழில்நுட்ப அம்சங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்."

தமிழக அரசு தரப்பு வாதம்: தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். "ஏற்கெனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கும் முயற்சியாகவே இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது 'புதிய பானையில் பழைய கள்' என்பதைப் போன்றது," என்று அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "விதிகளின்படி விளக்கம் அளிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு ஏன் அவகாசம் வழங்கப்படவில்லை? தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அவர்கள் அரசுக்கு விளக்கம் அளிக்கலாமே?" என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இந்த மனு குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து

MAKKALFeb 13, 2026 - 04:02:35 PM | Posted IP 162.1*****

BAN STERLITE, ALSO BAN ANY OTHER BANNER BASED STERLITE

மனிதன்Feb 13, 2026 - 12:13:47 AM | Posted IP 162.1*****

கொலை யார் பண்ணி இருந்தாலும் குற்றம் குற்றமே... முதலில் 13 பேர் கொலைக்கு தண்டனை கொடுத்தார்களா? அதை நிறைவேற்றிவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும்....

கே.கணேசன்.Feb 12, 2026 - 09:33:14 PM | Posted IP 172.7*****

நிபுணர்கள் கூற்றுப்படி நடந்து கொள்வது இருதரப்புக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்று. அரசு இதனை ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறேன்.

இதுFeb 12, 2026 - 07:02:59 PM | Posted IP 104.2*****

கொஞ்ச நாள்ல திராவிட குடும்ப அரசியல்வாதி வாங்கிடுவாங்களாம்

ஆமாFeb 12, 2026 - 06:59:17 PM | Posted IP 172.7*****

திராவிட குடும்ப அரசு தான் சத்தமில்லாமல் அரசியல்வாதிகளுக்கு பணத்துக்காக திறக்கிறது

TAMILANFeb 12, 2026 - 11:45:03 AM | Posted IP 172.7*****

VENDAAM

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory