» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனியார் மின் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க போராட்டம்: போலீசார் குவிப்பு

புதன் 11, பிப்ரவரி 2026 9:11:02 PM (IST)



புதுப்பட்டியில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம், விவசாய நிலங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் ஓடைகளை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளதாகக் கூறி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா புதுப்பட்டி மற்றும் அணியாபரநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பண்டாரம், முருகன் உள்ளிட்டோர், தனியார் மின் நிறுவனம் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நிலங்களைச் சுற்றி முள்வேலி அமைத்துள்ளதாக அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். ஆனால், இந்தப் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரியும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க விவசாய அணி மற்றும் கருங்குளம் ஒன்றிய பா.ஜ.க-வினர் விவசாயிகளுடன் இணைந்து புதுப்பட்டி தனியார் மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் துணை வட்டாட்சியர் பாண்டியராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிறிஸ்டோபர் தாசன் மற்றும் காவல் ஆய்வாளர் செந்தில்வேல்குமார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் சரவணா கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார் பிரபு, கருங்குளம் ஒன்றியத் தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நீர்வழிப்பாதைகள் மற்றும் வடிகால் ஓடைகள் மீட்கப்படும் என்றும், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல ஏதுவாகப் பாதை அமைத்துத் தரப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுப் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மண்டல் தலைவர் நங்கமுத்து, மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory