» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடலை மிட்டாய் உற்பத்தி குறுங்குழும பொது வசதி மையம் : அமைச்சர் பி.கீதா ஜீவன் அடிக்கல் நாட்டினார்

புதன் 30, ஜூலை 2025 8:45:45 PM (IST)



கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தி குறுங்குழும பொது வசதி மையம் கட்டுவதற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், மூப்பன்பட்டி ஊராட்சியில் இன்று (30.07.2025) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7.12 கோடி மதிப்பீட்டில் நவீன இயந்திரங்களுடன் கூடிய கடலைமிட்டாய் உற்பத்தி குறுங்குழும பொது வசதி மையம் கட்டுவதற்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார். 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்ததாவது : புவிசார் குறியீடு பெற்று தரத்திலும், சுவையிலும் உலகப் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதலையும், வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளுக்கேற்ப அவர்களது உற்பத்தி திறனை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு ‘கோவில்பட்டி பகுதியில் கடலைமிட்டாய் உற்பத்தி குறுங்குழுமம் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
 
அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து நவீன இயந்திரங்களுடன் கூடிய மூலப்பொருட்களைத் தரம் பிரிக்கும் கூடம், கடலைமிட்டாய் உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் கூடம், உணவுப்பொருட்கள் பகுப்பாய்வுக் கூடம், ஆகியவற்றை அமைப்பதற்காக குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.713.22 இலட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. 

மொத்த திட்ட மதிப்பீட்டில் 90% தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு மீதமுள்ள 10% கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தால் முதலீடு செய்யப்பட்டது. இந்த பொது வசதி மையம் அமைவதால் கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சுமார் 100 குறு மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர். 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பும், ஆண்டிற்கு 60 கோடி வருவாயும் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவில்பட்டி கடலைமிட்டாயின் நேரடி ஏற்றுமதி வருவாயும் தற்போதைய அளவிலிருந்து 5 மடங்கு அதிகரிக்கும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, கோவில்பட்டி நகரமன்றத் தலைவர் கருணாநிதி, தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ.ஸ்வர்ணலதா, தொழில் நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory