» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேளாண்மை பயிர்களுக்கு ரூ.59.20 கோடி இழப்பீடு தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை: ஆட்சியர் தகவல்!

வியாழன் 23, ஜனவரி 2025 4:04:53 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 2024 வெள்ளத்தால் சேதமடைந்த வேளாண்மை பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு ரூ.59,20,71,296 இழப்பீடு தொகை வழங்க அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (23.01.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 25.51 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த 2024 ஆம் வருடத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரி மழை அளவு 662.20 மி.மீ-; ல் 587.78 மி.மீ கிடைக்கப்பெற்றுள்ளது.

மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 4139 மெ.டன் யூரியா, 2313 மெ.டன் காம்ப்ளக்ஸ், 1491 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 673 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் இருப்பில் உள்ளன. நடப்பு ஜனவரி, 2025 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு 1175 மெ.டன் யூரியா, 1860 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 800 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான உரங்கள் 700 மெ.டன் யூரியா 200 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 1100 மெ.டன் காம்ப்ளக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2024 வெள்ள சேத அறிக்கை- வேளாண்மைத்துறை: தூத்துக்குடி மாவட்டத்தில் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 முதல் 15 வரை பெய்த அதீத கனமழையால்; சேதமடைந்த வேளாண்மை பயிர்கள் 68,444.80 எக்டர் பரப்பு கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடு தொகை ரூ.59,20,71,296 வழங்க அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு ஆணை வெளியிட்டவுடன் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படும்.

டிசம்பர் - 2024 வெள்ள சேத அறிக்கை -தோட்டக்கலைத்துறை: தூத்துக்குடி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 முதல் 15 வரை பெய்த அதீத கனமழையால் சேதமடைந்த தோட்டக்கலை பயிர்கள் 17626.1018 எக்டர் பரப்பு கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடுத் தொகை ரூபாய் 16,30,14,742/- வழங்க அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு ஆணை வெளியிட்டவுடன் விவசாயிகளின் வங்கிகணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படும்.

திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்-வேளாண்மைத்துறை: 2023-2024ம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரிபயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உளுந்து பயிருக்கு ரூ.61.153 கோடி,பாசிப்பயறுக்கு ரூ.17.33கோடி, மக்காச்சோளத்திற்கு ரூ.90.84 கோடி,கம்புபயிருக்கு ரூ.9.38கோடி, சோளப்பயிருக்கு ரூ.6.7கோடி, நிலக்கடலைபயிருக்கு ரூ.0.12 கோடி,எள் பயிருக்கு ரூ.0.042கோடி, சூரியகாந்தி பயிருக்கு ரூ.3.02 கோடி மற்றும் நெல்-ஐஐஐ பயிருக்குரூ.10.55 கோடி ஆக மொத்தம் ரூ.199.167கோடி காப்பீட்டுத் தொகை இப்கோ-டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தால் 78215 விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பருத்தி-ஐஐஐ பயிருக்கு மத்திய,மாநிலஅரசுகளின் மானியம் கிடைக்கப் பெற்றவுடன் விரைவில் இப்கோ-டோக்கியோ காப்பீடு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு விடுவிக்கப்படும்.

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரிபயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-25ஆம் ஆண்டிற்கு ராபி பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடுசெய்து பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில்; பொதுசேவைமையங்கள் மூலமாகவோ,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். 

2024-25ம் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தில் மொத்தம் 145.00 எக்டேர் பரப்பளவு உழவு மேற்கொள்ள இலக்கு மற்றும் ரூ. 7.83 இலட்சம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்று 21.00 எக்டேர் பரப்பளவு உழவு மேற்கொள்ள விவசாய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 16.705 எக்டேரில் பணிகள் முடிக்கப்பட்டு ரூ.90,207/- மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் குறுகியகால மற்றும் மத்திய கால கடன்கள் : தொடக்கவேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்கள் மூலம் 18.01.2025வரை ரூ.238.65கோடிக்கு 21008விவசாயிகளுக்கு விவசாயபயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 15414 சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.175.96 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன்;, இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் ராஜேஷ், செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சௌமியன், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

செ .இராஜேந்திரன்Jan 29, 2025 - 09:53:07 PM | Posted IP 162.1*****

தென்காசி மாவட்டத்திலும் சில இடத்தில் நெல் மழையால் பாதிக்கப்பட்டு நற்கதிர்கள் தரமற்ற விதைகளாலும் குறுகிய காலத்தில் கதிர் வந்த காரணத்தினாலும் நெல்மணிகள் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டமாக கருதுகிறார்கள் ஆகையால் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் செய்தவர்களுக்கு உரிய இழப்பீடு தென்காசி மாவட்ட ஆட்சியர் கவனத்தில் மேற்கொண்டு நெல் பாதிப்புகள ஆய்வு செய்ய வேண்டும்

BalakrishnareddyJan 25, 2025 - 11:53:09 AM | Posted IP 162.1*****

அதீத மழையால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்ட ஈடு பணம் எப்போது வரவு வைக்கப்படும்? கோவில்பட்டி,எட்டையபுரம்வட்டத்திற்கு உண்டா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory