» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்கள் களம் நிகழ்ச்சியில் ரூ.35லட்சம் நலதிட்ட உதவிகள்: கனிமொழி எம்பி வழங்கினார்.

வியாழன் 30, நவம்பர் 2023 8:33:34 AM (IST)



தூத்துக்குடி ஊராட்சி ஒன்றி பகுதிகளில் மக்கள் களம் நிகழ்ச்சியில் 54 பயனாளிகளுக்கு ரூ.35,62,592 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வர்த்தகரெட்டிபட்டி, திம்மராஜபுரம், அல்லிக்குளம், கூட்டுடன்காடு மற்றும் குமாரகிரி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் களம், மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி , மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,  முன்னிலையில் பல்வேறு துறைகள் மூலமாக பட்டா மாறுதல் உத்தரவு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான தனிநபர் கடன், வேளாண்மை இடுபொருட்கள் என மொத்தம் 54 பயனாளிகளுக்கு ரூ.35,62,592/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்ததாவது:

மக்கள் களம் நிகழ்ச்சி என்பது பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்கள் என அத்தனை பேரும் உங்கள் ஊருக்கு வந்து உங்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று விரைவில் தீர்வு காண்பதற்கான முயற்சியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் வர்த்தகரெட்டிபட்டி பகுதியில் ரூ.2.38 கோடி மதிப்பில் சாலை வசதி உள்ளிட்ட 69 திட்டங்களை இந்த பகுதியில் செய்து தந்திருக்கிறார்கள். இதுவரை மக்கள் களம் நிகழ்ச்சியில் 536 பேருக்கு பட்டா, 147 பேருக்கு ரூ.2.67 கோடி சுய உதவிக்குழு கடன் உதவிகள், 200 பேருக்கு மேல் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நகர்ப்புற பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயண திட்டம், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். 

தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1 கோடியே 13 லட்சம் மகளிர்கள் மாதம் ரூ.1000 பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தில் சிலருக்கு விடுபட்டு இருக்கக்கூடிய சூழலும் இருக்கிறது. மீண்டும் மேல் முறையீடு செய்தால் நியாயமாக கிடைக்கக்கூடிய வகையில் உள்ள மகளிர்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே நியாயமாக மகளிர் உரிமைத்தொகை யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்;களுக்கு நிச்சயம் வழங்கப்படும். மேலும் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பர்னிச்சர் பார்க் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ளார்கள். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்கள். மேலும், கிராமங்களில் மக்களுக்கு அடிப்படை வசதி செய்துதர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் திம்மராஜபுரம் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், தொழிற்கூட கட்டிடம் ஆகிய 3 திட்டங்களை தந்துள்ளார்கள். இப்பகுதியில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சாலைவசதி, வாறுகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மண்புழு உரக்கிடங்கினை புணரமைத்தல் உள்ளிட்ட 122 பணிகளுக்கு ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சில பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 

அல்லிக்குளம் ஊராட்சி பகுதியில் 91வது மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இப்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்காக 74 பணிகளுக்கு ரூ.1.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார்கள். இதில் சில பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சில பணிகள் நடைபெற்று வருகிறது. கூட்டுடன்காடு பகுதியில் 170 பணிகளுக்கு ரூ.6.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் சாலைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது. 

சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. குமாரகிரி ஊராட்சி பகுதியில் ரூ.9.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பேவர் பிளாக் சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், தார் சாலை அமைத்தல், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் எந்த மதத்தை, எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக தமிழர்களாக வாழ வேண்டும் என்றும், எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியின் நீட்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆட்சி திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

முன்னதாக திம்மராஜபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ்ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், பேரூரணியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திம்மராஜபுரம் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தினையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிகளில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆஸ்கர், தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, ஹெலன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் மல்லிகா (வர்த்தகரெட்டிபட்டி), சித்திரைச்செல்வன் (திம்மராஜபுரம்), ஆனந்தி (அல்லிக்குளம்), மாங்கனி(கூட்டுடன்காடு), ஜாக்சன் துரைமணி (குமாரகிரி), ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்கள் பரியேறும் பெருமாள் (வர்த்தகரெட்டிபட்டி), ஜெயராஜ் (திம்மராஜபுரம்), பூலம்மாள் (அல்லிக்குளம்), முத்துலெட்சுமி (கூட்டுடன்காடு), முப்பிலியன் (குமாரகிரி), மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory