» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம் : கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 25, ஆகஸ்ட் 2023 9:50:23 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
முதல்வரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் இன்று காலை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. மாணவர்-மாணவிகளுக்கு உணவை பரிமாறிய மக்களை உறுப்பினர் கனிமொழி, தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த பள்ளியில் மொத்தம் 125 மாணவர்- மாணவியர் பயனடைந்தனர். மாவட்டம் முழுவதும் 524 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 18 ஆயிரத்து 819 மாணவ - மாணவியர் பயனடைந்தனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, சார் ஆட்சியர் கௌரவ்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்)வீர புத்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நாலாட்டின்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இத்திட்டத்தை துவக்கிவைத்து குழந்தைகளோடு காலை உணவு உண்டார். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராஜ், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி ஒன்றியக் குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.