» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேசிய விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
வெள்ளி 27, ஜனவரி 2023 7:34:24 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு தேசிய விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின் பேரிலும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் குமரன் மற்றும் நெல்லை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுமதி ஆகியோர் ஆலோசனையின்படி தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தலைமையில் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் ஆறுமுகம், ராம்மோகன், உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், ஹெமஸ் மஸ்கர்னாஸ், சமுத்திரவேலு, ஜோதிலட்சுமி ஆகியோர் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது தேசிய விடுமுறை தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காமல் தொழிலாளர்களை பணியமர்த்திய முரண்பாட்டிற்காக 18 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், 15 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் மொத்தம் 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.