» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில், கடற்கரை வெறிச்சோடியது!
சனி 15, ஜனவரி 2022 7:33:51 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசம் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
கரோனா, ஒமைக்ரான் வைரஸ் தொற்று தற்போது அதிக அளவு பரவ தொடங்கி உள்ளது. இதையடுத்து, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகை தினமான நேற்று முதல் வருகிற செவ்வாய்க்கிழமை வரை 5 நாட்கள் தொடர்ந்து தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட பண்டிகைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நாட்களில் கோவில்களில் பக்தர்கள் வருகை அதிக அளவு இருக்கும். அதனால், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 5 நாட்கள் பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த வாரம் தொடர்ந்து 4 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆனால், நேற்று முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதனால் நேற்றும், இன்றும் திருச்செந்தூர் கோவில் வளாகம், கடற்கரை அனைத்தும் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோவில் வடக்கு, தெற்கு டோல்கேட் மற்றும் அனுக்கிரக மண்டபம் அருகில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் கோவில் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வடக்கு டோல்கேட் முன்பு நின்று சூடம் ஏற்றி கோபுர தரிசனம் செய்து விட்டு சென்றனர்.