» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சுற்றுலா பயணி தொலைத்த ரூ.6.7கோடி மோதிரம்: கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மை பணியாளர்கள்!
செவ்வாய் 12, டிசம்பர் 2023 4:14:11 PM (IST)
பாரிஸ் சொகுசு ஓட்டலில் மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி பெண் ஒருவர் தொலைத்த 6.7 கோடி ரூபாய் மதிப்புள்ள மோதிரத்தை தூய்மை பணியாளர்கள் கண்டுபிடித்து கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நகருக்கு மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி பெண் டிச.8-ம் தேதி சென்றிருந்தார். பாரிஸ் வெட்டோமில் உள்ள சொகுசு ரிட்ஸ் ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். அவர் தனது ஓட்டல் அறையில் ரூ.6.7 கோடி ரூபாய் மதிப்புள்ள மோதிரத்தை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த மோதிரத்தில் 6.51 காரட் வைரம் மற்றும் இரண்டு பிளாட்டினம் பதிக்கப்பட்டிருந்தது.
அந்த பெண், ஷாப்பிங் சென்று விட்டு அறைக்குத் திரும்பிய போது, மோதிரம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல் துறையில் அந்த பெண் புகார் செய்தார். அந்த மோதிரத்தைத சொசுகு ஓடடலின் ஊழியர் ஒருவர் திருடியதாக அவர் போலீஸில் புகார் அளித்தார். ஆனால், ஓட்டல் நிர்வாகம் இதை மறுத்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த பெண்ணுக்கு இழப்பீடாக முன்று இரவுகள் ஓட்டலில் இலவசமாக தங்க நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், அந்த பெண் அங்கு தங்காமல் லண்டனுக்குச் சென்று விட்டார். இந்த நிலையில், மோதிரம் காணாமல் போன இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓட்டலில் தூய்மைப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போது அந்த மோதிரம் வாக்கம் கிளீனரின் துப்புரவு பையில் சிக்கியது. இதை அந்த ஊழியர்கள், ஓட்டல் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த ஓட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலை உயர்ந்த மோதிரத்தை தேட அணி திரட்டிய ரிட்ஸ் பாரிஸில் உள்ள ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். ஒவ்வொரு நாளும் நேர்மை மற்றும் தொழில் முறையுடன் நாங்கள் பணியாற்றுகிறோம் என்று கூறியுள்ளது. தனது மோதிரத்தைப் பெற லண்டனில் இருந்து பாரிஸ் நகரை நோக்கி அந்த பெண் சென்றார். ரூ.6.7 கோடி ரூபாய் மோதிரத்தை கண்டெடுத்த தூய்மை பணியாளர்கள் தங்கள் நிர்வாகத்திடம் ஒப்படைத்த செயல் பாராட்டையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.