» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழர்கள் குறித்து அவதூறு பேச்சு: மத்திய அமைச்சர் ஷோபா மீதான வழக்கை விசாரிக்க தடை!
வெள்ளி 22, மார்ச் 2024 8:30:20 PM (IST)
கர்நாடகத்தில் நடக்கும் குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரத்பேட்டையில் ஒரு செல்போன் கடையில் அனுமன் பஜனை பாடல் ஒலிக்கப்பட்ட விவகாரத்தில், கடை உரிமையாளர் முகேஷ் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி இருந்தது. இதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று இருந்த மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா, தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று, கர்நாடகத்தில் வந்து வெடிகுண்டு வைப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசி இருந்தார்.
மத்திய மந்திரி ஷோபாவின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். மேலும் தமிழ்நாடு மதுரை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் மத்திய மந்திரி ஷோபா மீது தியாகராஜன் என்பவர் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், மத்திய மந்திரி ஷோபா மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தில் புகார்அதே நேரத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனுவை அனுப்பி வைத்திருந்தார்.
இதையடுத்து, ஷோபா மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன் விவரத்தை 48 மணிநேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.ஷோபா மீது 3 பிரிவுகளில் வழக்குஇந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து தான் கூறிய கருத்துகளை திரும்ப பெறுவதாகவும், தான் கூறிய கருத்து வேதனையை ஏற்படுத்தி இருந்தால், அதற்காக எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய மந்திரி ஷோபா நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில், கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் பெங்களூரு காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்தில் மத்திய மந்திரி ஷோபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர் மீது 123 (3ஏ) (மதம், இனம், மொழி அடிப்படையில் வெறுப்புணர்வை உண்டாக்குதல்), 123(3) (மதம், மொழி அடிப்படையில் வாக்களிக்க மற்றும் வாக்களிக்க வேண்டாம் என கூறுதல்), 125 (மோதலை தூண்டும் விதமாக பேச்சு) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காட்டன் பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஷோபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவது குறித்த தகவல்கள், வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே மதுரை சைபர் கிரைம் போலீசில் ஷோபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஷோபா மீது பெங்களூரு, மதுரை உள்ளிட்ட 3 இடங்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு மத்திய மந்திரி ஷோபா ஆஜராக வேண்டும் என்று போலீசார் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் நேரமாக உள்ளது. நான் வேட்பாளராக இருப்பதால் தொகுதிக்கு செல்ல வேண்டும். இதனால் போலீசாருக்கு விசாரணையில் ஒத்துழைப்பதில் சிக்கல் உள்ளது.
எனவே இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஷோபா தரப்பில் கர்நாடகா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கர்நாடக ஐகோர்ட்டு, ஷோபா மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.