» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் கைது : அமலாக்க துறை அதிரடி!!
வெள்ளி 22, மார்ச் 2024 9:57:24 AM (IST)
புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கில் தான் ஏற்கனவே அம்மாநில முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து தன்னை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளித்த டெல்லி ஐகோர்ட், கெஜ்ரிவாலை கைது செய்யத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே இப்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து கெஜ்ரிவால் வீட்டில் சில மணி நேரம் சோதனை நடந்த நிலையில், அமலாக்கத் துறை இப்போது அவரை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே இருக்க கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.