» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த 4 பேர் சாவு : மேலும் 3 பேர் கவலைக்கிடம்!
வியாழன் 21, மார்ச் 2024 8:16:23 AM (IST)
பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் உள்ளது குஜ்ரான் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் சிலர் நேற்றுமுன்தினம் இரவு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்தனர். பின்னர் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் விஷ சாராயம் குடித்ததால் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷ சாராயம் குடித்த மேலும் 3 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, மன்பிரீத் சிங் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மன்பிரீத் சிங் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.