» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வெளிநாட்டு நன்கொடை பெற தொண்டு நிறுவனத்துக்கு மத்திய அரசு தடை
வியாழன் 18, ஜனவரி 2024 5:35:14 PM (IST)
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு, சி.பி.ஆர்., என்ற தொண்டு நிறுவனத்துக்கு மத்திய அரசு நிரந்தர தடை விதித்துள்ளது.
புது டெல்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'சென்டர் பார் பாலிசி ரிசர்ச்' என்ற தொண்டு நிறுவனம், பல்வேறு துறைகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. யாமினி அய்யர், தலைமை செயல் அதிகாரியாக உள்ள இந்த நிறுவனம், பல நாடுகளில் இருந்து நன்கொடைகள் பெற்று வந்தது.
உலக வங்கி, போர்டு அறக்கட்டளை, பில் அண்ட் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை என, பல அறக்கட்டளைகள், இந்த அமைப்புக்கு நன்கொடைகள் அளித்து வந்தன. இதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, ஒய்.வி.சந்திரசூட் உள்ளிட்டோர் இருந்து உள்ளனர்.
இந்த அமைப்பு, வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம், கடந்தாண்டு, பிப்ரவரியில் இடைக்கால தடை விதித்தது.எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், அதன் விதிகளை மீறியதாக, இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக பெறப்படும் வெளிநாட்டு நன்கொடைகளை, வேறு திட்டங்கள், பிரசாரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த இடைக்கால தடையை எதிர்த்து, அமைப்பின் சார்பில் புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவதற்கு இந்த அமைப்புக்கு நிரந்தர தடை விதித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.