» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அரவிந்த் கேஜரிவால் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
செவ்வாய் 16, ஜனவரி 2024 4:21:47 PM (IST)
பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து விமர்சித்தது தொடர்பான அவதூறு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்து விமர்சனம் செய்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால் மற்றும் சஞ்சய் சிங்குக்கு எதிரான அவதூறு வழக்கினை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (ஜன.16) இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
குஜராத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை, குஜராத் மாநிலத்திற்கு வெளியே குறிப்பாக கொல்கத்தா நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சஞ்சய் சிங் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
சஞ்சய் சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், "உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, விசாரணை நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை நடத்துவதாகவும், இந்த விசாரணையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும்” குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸை ரத்து செய்வது குறித்து நான்கு வாரத்திற்குள் முடிவெடுக்குமாறு குஜராத் விசாரணை நீதிமன்றத்திற்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், அதுவரை விசாரணையை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு கூறியது.