» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கையுறை ஆலையில் பயங்கர தீவிபத்து: 6 பேர் உடல் கருகி பலி
திங்கள் 1, ஜனவரி 2024 8:40:33 AM (IST)
மராட்டியத்தில் கையுறை ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தன்ர்.
மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர்(அவுரங்காபாத்) வாலுஜ் எம்.ஐ.டி.சி. பகுதியில் சன்சயின் என்டா்பிரைசஸ் என்ற பெயரில் கையுறை தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சுமார் 15 தொழிலாளர்கள் தூங்கிக்கொண்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதையடுத்து ஆலையில் தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு எழுந்தனர். எனினும் அதற்குள் ஆலையின் வாசல் பகுதிக்கு தீ பரவியது. இதனால் அவர்களால் தப்பித்து வெளியே செல்ல முடியாமல் போனது. சில தொழிலாளர்கள் ஆலையின் மேற்கூரை மீது ஏறி அருகில் உள்ள மரத்தை பிடித்து கீழே குதித்தனர். இதனால் அவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதற்கிடையே, 6 தொழிலாளர்கள் ஆலைக்குள் தீயில் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆலைக்குள் புகுந்து அங்கு தீயில் சிக்கி உடல் கருகி கிடந்த 6 தொழிலாளர்களை பிணமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார், தொழிலாளர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான தொழிலாளர்கள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆலையில் பிடித்த தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்து குறித்து விாிவான விசாரணை நடத்தப்படும் என தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தநிலையில் ஆலை தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார். ஆலை தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சத்ரபதி சம்பாஜி நகரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.