» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆவணமின்றி ரூ.2,000 நோட்டை மாற்ற எதிர்ப்பு : அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!
வியாழன் 1, ஜூன் 2023 12:18:52 PM (IST)
ஆவணமின்றி ரூ.2,000 நோட்டை மாற்ற தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அஸ்வினிகுமார் உபாத்யாய் ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம், ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பில் எவ்வித பிழையும், தன்னிச்சையும் இல்லை. மேலும் கருப்பு பணத்தையும், பண மோசடியையும், ஊழலையும் ஊக்குவிப்பதாகவும் இல்லை என்றும், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் தெரிவித்து, ரிட் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 29-ந் தேதி தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மனுதாரர் அஸ்வினிகுமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மேலும் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், ஆவணமின்றி ரூ.2,000 நோட்டை மாற்றுவது தொடர்பான மேல்முறையீடு வழக்கை அவரசமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. இது முக்கியமான விவகாரம் என்பதால் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
Related Tags :