» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்குகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது : அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சவால்!

புதன் 24, ஜூன் 2026 5:53:38 PM (IST)

தன் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டாலும் அஞ்சாமல் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக உண்மையை உரக்கப் பேசுவோம் என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற திமுக உட்கட்சிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் தொகுதி நிலவரங்கள் குறித்துப் பேசிய அவர், "மக்களுக்காகப் பல்வேறு நன்மைகளைச் செய்த மு.க.ஸ்டாலினைத் தோற்கடித்தவர்கள் எதற்கும் தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தனது பெயர்க் காரணங்கள், விஜய் மேற்கொண்ட தேர்தல் உத்திகள் மற்றும் தனது திருச்செந்தூர் தொகுதி மீனவ மக்கள் தனக்கு வாக்களிக்காதது குறித்த தனது வேதனைகளையும் அந்த கூட்டத்தில் அவர் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். பொதுமக்களைத் தாக்கிப் பேசியதாக எழுந்த கேள்விக்கு, காமராஜர் தோற்கடிக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணியைச் சுட்டிக்காட்டி அவர் விளக்கமளித்திருந்தார்.

அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த சர்ச்சை கலந்த பேச்சுக்குத் தமிழகத்தின் ஆளுங்கட்சியான தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாகத் தவெக தரப்பில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையத்தில் முறைப்படி புகாரளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த போலீஸ் நடவடிக்கை குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழர்களின் சுயமரியாதைக்காகவும் அச்சமின்றித் தொடர்ந்து இயங்கிவரும் திமுகவின் உண்மைத் தொண்டனை வழக்குகள் போட்டு அச்சுறுத்த இயலாது. 

கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வழியில் மக்களின் உரிமைக்கும் வாழ்வியலுக்குமான எங்கள் போராட்டம் என்றும் தொடரும். எழுத்துரிமை, பேச்சுரிமை, ஜனநாயக உரிமை என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளை வழக்குகள் மூலம் தடுத்து நிறுத்த முடியாது. திருச்செந்தூர் தொகுதி மக்களின் நலனுக்காக என்றும் போராடுவோம், உண்மையை உரக்கப் பேசுவோம், மக்கள் சக்தி வெல்வது நிச்சயம்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

ஒரு தொண்டன்Jun 24, 2026 - 06:28:51 PM | Posted IP 172.7*****

உங்க MLA பதவி எல்லாம் சும்மாவா? எதற்காக திருச்செந்தூர் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்? பிற கட்சி மீது வம்பு இழுக்கவா அது மட்டுமா உங்க வேலையா?? யாருக்காக உழைக்கிறீர்கள்?? மக்களுக்காகவா? திமுக குடும்பத்துக்காக வா ? கடவுளுக்கு பயந்து ஒவ்வொரு தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேளுங்கள் அதுவே சிறந்த பணியாகும்.எனவே வேலையை பார்த்து கடந்து செல்லுங்கள். "தவளை தன் வாயால் கெடும்" என்பது பழமொழி நினைவுக்கு வருகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory