» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது : தேர்தலை புறக்கணிக்க முடிவு!
ஞாயிறு 24, மார்ச் 2024 6:51:07 PM (IST)
தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மீனவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் தாங்கள் தொழில் செய்யும் கடல் பகுதியில் கேரள மாநில விசைப்படகு மற்றும் கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் பகுதி விசைப்படகுகள் இரவு நேரங்களில் தொழில் செய்வதை தடுக்க வேண்டும் தங்களுக்கு ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக போராடி வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் பகுதியில் தொழில் செய்த கேரள மாநில மற்றும் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஆறு விசைப்படைகளை 86 மீனவர்களுடன் சிறை பிடித்து வைத்துள்ளனர். போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் இன்று காலை விசைப்படகு உரிமையாளர் போஸ்கோ என்பவரை காவல்துறையினர் திடீரென கைது செய்தனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட படகு மற்றும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் மீனவர்கள் இதற்கு ஒத்துழைக்காமல் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கைது செய்த மீனவர் போஸ்கோவை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் தங்கு கடல் செல்ல அனுமதி வழங்க வேண்டும். இல்லை என்றால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க மாட்டோம். தேர்தலை புறக்கணிப்போம் என்றும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்
அப்போது அமைச்சர் "இது தேர்தல் நேரம் தேர்தல் முடிந்த பின்பு பேசி தீர்த்துக் கொள்ளலாம்" என்று தெரிவித்தார். அதற்கு மீனவர்கள் தாங்கள் இந்த கோரிக்கையை 20 ஆண்டுகளாக வைத்து போராடி வருகிறோம். இல்லையென்றால் கடிதம் மூலம் எழுதிக் கொடுத்து எங்களுக்கு உறுதி அளிக்கிறீர்களா என கேட்டனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகளிடம் கேட்டு தங்களுக்கு பதில் கூறுவதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து அமைச்சர் கீதா ஜீவன் சென்று விட்டார். தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி விசைப்படகு துறைமுக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.