» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
எந்த வகையிலும் நுழைவுத்தேர்வை திணிக்க கூடாது : மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!
வெள்ளி 6, டிசம்பர் 2024 4:31:31 PM (IST)
பட்டப்படிப்புகளுக்கும் மறைமுகமாக நுழைவுத் தேர்வுகளை திணிக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுப்பது அநீதியானது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் உயர்கல்வியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ள பல்கலைக்கழக மானியக்குழு, அது குறித்து சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளை அறிவதற்காக வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் வரும் 23-ந்தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. 12-ம் வகுப்பில் ஒருவர் எந்த பாடப்பிரிவைப் படித்தாலும், நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், கல்லூரியில் அவர் விரும்பும் பாடப்பிரிவில் சேர முடியும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இதுவரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில் இனி இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும். பட்டப்படிப்பு படிப்பதற்கான கால அளவை மாணவர்களே குறைத்துக் கொள்ளவும், நீட்டித்துக் கொள்ளவும் முடியும் என்பதைதான் பல்கலைக்கழக மானியக்குழு மக்கள் முன் வைத்திருக்கும் புதிய யோசனைகளாகும்.
12-ம் வகுப்பில் ஒரு பாடப்பிரிவை படித்தவர்கள் பட்டப்படிப்பில் வேறு பாடத்தை படிக்க வேண்டும் என்றால், அதற்கு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் 12-ம் வகுப்பில் படித்த படிப்பையே கல்லூரியிலும் படிக்க நுழைவுத்தேர்வு தேவையா? என்பது குறித்து வரைவு அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் மாணவர் சேர்க்கை வாயிலாக சேர விரும்பும் மாணவர்கள் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்று கடந்த ஜூன் 19-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் எந்த மாற்றமாக இருந்தாலும், அதனடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று மானியக்குழு அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே, பல்கலைக்கழக மானியக்குழு இப்போது அறிவித்திருக்கும் அனைத்து சீர்திருத்தங்களும் மாணவர்களை நுழைவுத்தேர்வு முறைக்கு கொண்டு வருவதற்கான தூண்டில்கள்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நுழைவுத்தேர்வுகள் சமூகநீதிக்கு எதிரானவை என்பதால் அவற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படியாக புதிய, புதிய வடிவங்களில் நுழைவுத்தேர்வுகள் திணிக்கப்பட்டால், தற்போது நடைமுறையில் உள்ள பள்ளிக்கல்விக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும். பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அனைத்து மாணவர்களும் நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகி விடும். அது சமூக நீதிக்கு நன்மை செய்யாது.
நுழைவுத்தேர்வுகள் என்பது ஊரக, ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் நுழையாத் தேர்வு என்பதை பா.ம.க. தொடங்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழகத்தில் ஊரக, ஏழை மாணவர்களின் தொழில்கல்விக்குத் தடையாக இருந்த மருத்துவம், பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வை அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் நடத்தி அகற்றியது பா.ம.க.தான்.
ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் ஓர் அடி முன்னேறினால், இரு அடி பின்னேறுவதைப் போலத்தான் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. நீட் தேர்வை அறிமுகம் செய்ததன் மூலம் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை மத்திய அரசு பறித்துக் கொண்டது. அடுத்தகட்டமாக பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, இப்போது பட்டப்படிப்புகளுக்கும் மறைமுகமாக நுழைவுத் தேர்வுகளை திணிக்க நடவடிக்கைகள் எடுப்பது அநீதியானது. அவற்றை ஒருபோதும் ஏற்க முடியாது.
12-ம் வகுப்பில் ஒருவர் எந்த பாடப்பிரிவைப் படித்தாலும், நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், கல்லூரியில் அவர் விரும்பும் பாடப்பிரிவில் சேர முடியும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இதுவரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில் இனி இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பன உள்ளிட்ட யோசனைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக் கேட்டு, அதனடிப்படையில் முடிவு எடுக்கலாம். ஆனால், எந்த வகையிலும் நுழைவுத்தேர்வை திணிக்க மத்திய அரசு முயலக்கூடாது." இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க. ஆட்சி : பிரதமர் மோடி மகிழ்ச்சி
சனி 8, பிப்ரவரி 2025 4:01:15 PM (IST)

தமிழக அரசியலில் மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம்: தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
திங்கள் 3, பிப்ரவரி 2025 9:00:02 PM (IST)

தமிழகத்தை அதள பாதாளத்தில் தள்ளிய அதிமுகவை மக்கள் மறக்க மாட்டார்கள் : முதல்வர் ஸ்டாலின்
புதன் 22, ஜனவரி 2025 12:44:40 PM (IST)

மகளிருக்கு உதவித் தொகை: திமுகவை பாஜக பின்பற்றுகிறது - கனிமொழி எம்பி கருத்து!!
சனி 18, ஜனவரி 2025 10:32:37 AM (IST)

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பு: அண்ணாமலை அறிவிப்பு
திங்கள் 13, ஜனவரி 2025 8:35:22 AM (IST)

அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
செவ்வாய் 31, டிசம்பர் 2024 5:35:22 PM (IST)
