» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை சீரழிந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

செவ்வாய் 14, நவம்பர் 2023 5:46:09 PM (IST)

"திமுக ஆட்சியாளர்களின் கொடுங்கரங்களில் சுகாதாரத் துறை சிக்கி சீரழிந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, அரசு மருத்துவமனைகளில் முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறை துவங்கிவிட்டது என்றும், நோயாளிகளை மருந்துகளுக்காக அலையவிட்ட திமுக அரசைப் பற்றியும், சுகாதாரத் துறை மந்திரியின் அலட்சியம் பற்றியும் பலமுறை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும், பேட்டிகளின் வாயிலாகவும் நான் தெரிவித்த பின்பும், இன்றும் நோயாளிகள் மருந்துகளுக்காக தவிக்கும் போக்கு தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவைப்படும் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மொத்தமாக வாங்கி, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு தாமதமின்றி நேரடியாக வழங்கி, அம்மருந்துகள் நோயாளிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தை (TamilNadu Medical Services Corporation Ltd) 1994-ஆம் ஆண்டு ஆரம்பித்தார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இதற்கென தனியாக இரண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இந்நிறுவனம் 2011 முதல் 2021 வரை மிகச் சிறப்பாக செயல்பட்டது.

இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றி நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தன. ஆனால், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் மருந்துகள் மொத்தமாக வாங்குவது குறைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு உள்ளூர் கொள்முதல் (Local Purchase) மூலம் பாதியளவு மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிய வருகிறது. இதனால், மருத்துவமனைகளுக்கு அனைத்து மருந்துகளும் விநியோகம் செய்யப்படாததால் ஏழை, எளிய நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மருந்துகள் வாங்க நாளை வருங்கள்; அடுத்த வாரம் வாருங்கள் என்று அலைக்கழிப்பதால், ஏழை, எளிய நோயாளிகள் பலமுறை பயணச் செலவு செய்து மருத்துவமனைகளுக்கு வந்தும் மருந்து வாங்க முடியாமல் அவதிப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல ஏழை, எளிய நோயாளிகள் பேருந்து போக்குவரத்து செலவுக்குக் கூட பணம் இல்லாமல் அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெயிலிலும், மழையிலும் நடைபயணமாகவே வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விளம்பர மோகத்தில் சுற்றித் திரியும் முதல்வரும், இத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரும், யார் எப்படி போனால் நமக்கென்ன? நமக்கு நம்ம சுயநலம் தான் முக்கியம். பொதுமக்களிடம் தங்களது ஒவ்வொரு அசைவையும் விளம்பரப்படுத்தி, எப்படி 2021 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் விளம்பரம் மூலம் வெற்றி பெற்றோமோ, அதுபோல், வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்துடன், விளம்பர மோகத்துடன் செயல்பட்டதால்தான் 23.7.2023 அன்று மதுரையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஒரு எதிர்கால தமிழகத்தை கட்டமைக்க இருந்த 20 வயது பொறியியல் மாணவனை நாம் இழந்திருக்கிறோம்.

எனது தலைமையிலான அதிமுக அரசு, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவப் பணியாளர் என நியமித்து அம்மா மினி கிளினிக்குகளை தமிழகமெங்கும் துவக்கியது. இதன்மூலம், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பருவ நோய்களுக்கு எளிதாக சிகிச்சை பெற்றனர். ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றவுடன், முதல் வேலையாக தமிழக மக்களுக்கு சேவை செய்து வந்த அம்மா மினி கிளினிக்குகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, பெயரை மாற்றி ‘நகர்ப்புற மருந்தகம்’ என்ற பெயரில் வெறும் 700 மருந்தகங்களை, நகர்ப்புறப் பகுதிகளில் மட்டும் துவக்கியுள்ளது. இதனால், கிராமப் பகுதிகளில் வாழும் மக்களை சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களுக்கும் நகரங்களை நோக்கி அலையவிட்டதுதான் இந்த திமுக அரசின் சாதனை.

எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை (Pain and Palliative Care) மற்றும் என்.சி.டி. (NCD) அதாவது, தொற்று நோய்கள் கண்டறிதல் திட்டத்தை பெயர் மாற்றி ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது திமுக அரசு. இதன்மூலம் ஓரிரு முறை மட்டுமே நோயாளிகளுக்கு நேரடியாக மருந்துகள் வழங்கப்பட்டன என்றும், தற்போது அனைத்து மருந்துகளும் நோயாளிகளுக்கு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்றும் செய்திகள் தெரிய வருகின்றன.

தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பலர் இருந்தும், 1.11.2023 முதல் மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடம் காலியாகவே இருப்பது, அரசு மருத்துவர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தகுதி மற்றும் திறமையின்படி நியமிக்க வேண்டிய இப்பதவி, ஏன் இன்னும் நிரப்பப்படவில்லை என்பதற்கு திமுக அரசின் முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் தமிழக மக்களுக்கு, குறிப்பாக மருத்துவ சமுதாயத்துக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

இரு நாட்களுக்கு முன்பு சென்னை மாநகர ஆணையர், அடிபட்ட தனது உதவியாளர் ராமன் என்பவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கு ஒரு மருத்துவர் கூட இல்லாத நிலையில், தனியார் மருத்துவமனையில் தனது உதவியாளருக்கு மருத்துவம் பார்த்துள்ளார். மேலும், அவரை மேல்சிகிச்சைக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்ப அவசர கட்டுப்பாட்டு அறை மூலம் ஆம்புலன்ஸை அழைத்தும், மிகுந்த காலதாமதத்துக்குப் பின்னர் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாட்டுக்கு இது ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த திமுக ஆட்சியில் பல ஆண்டுகளாக துறையின் உயர் அதிகாரியாக இருந்த அவரது உதவியாளருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் பரம்பூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆய்வுக்காகச் சென்றபோது, அங்கு அரசு மருத்துவர்கள் இல்லாததால் விபத்தில் காயமடைந்த நோயாளி பலமணி நேரம் காயத்துடன் அவதியுற்றதையடுத்து, டாக்டர் விஜயபாஸ்கர், தான் ஒரு மருத்துவர் என்ற முறையில் விபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிகழ்வும் இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. அதேபோல், தீபாவளி அன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் வெடி விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாமல், மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை அளித்த நிகழ்வும் ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

அதிமுக ஆட்சியிலும், எனது தலைமையிலான அரசிலும், தமிழக சுகாதாரத் துறை முதன்மை துறையாகத் திகழ்ந்தது. எங்களது ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து பல்வேறு விருதுகளைப் பெற்ற அதே தமிழக சுகாதாரத் துறை, இன்றைய திமுக ஆட்சியில் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள துறையாக மாறியுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த மருத்துவர்கள் தற்போது மனம் வெதும்பி உள்ளனர். தற்போதைய காட்டாட்சி தர்பார் நடத்தும் திமுக ஆட்சியாளர்களின் கொடுங்கரங்களில் சுகாதாரத் துறை சிக்கி சீரழிந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். இந்த கையாலாகாத ஆட்சியாளர்களுக்கு வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவது உறுதி.

இனியாவது அரசு மருத்தவமனைகள், மருத்துவப் பணியாளர்கள், கட்டுப்பாட்டு அறை ஆகியவை முழுமையாக இயங்கவும்; காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பவும்; அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் உடனடியாக தேவைப்படும் மருந்துப் பொருட்களை வழங்கிட வேண்டும் என்றும்; கிராமப் பகுதிகளிலும் அரசு கிளினிக்குகளை திறந்திட வேண்டும் என்றும்; இந்திய மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் முதல்வரையும், சுகாதாரத் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory