» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தாயின் கனிவு, ஆசிரியரின் அக்கறை... பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து!!
வெள்ளி 18, மார்ச் 2022 4:01:44 PM (IST)
தமிழக மேம்பாட்டுக்கு முன்னோட்டமான கொள்கை அறிக்கையாக பட்ஜெட் அமைந்துள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று, 2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது "தமிழகத்தின் பொருளாதார நிலை மற்றும் வருவாய் நிலை குறித்து தெரிவித்ததுடன் சில புதிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என நிதியமைய்ச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக பட்ஜெட் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தாயின் கனிவு, ஆசிரியரின் அக்கறை, சீர்திருத்தவாதியின் மானுட பற்றைக் கொண்ட நிதிநிலை அறிக்கை. தமிழக மேம்பாட்டுக்கு முன்னோட்டமான கொள்கை அறிக்கையாக பட்ஜெட் அமைந்துள்ளது. நிதி நெருக்கடி இருந்தாலும் சமாளித்து நிதிநிலை அறிக்கையை தயார் செய்தோம். திராவிட மாடல் பாணி தொடரும் என்பதை இந்த நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
* வரும் நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்,
* 8 ஆண்டுகளுக்கு பின்னர் அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை முதன் முறையாக குறைகிறது.
* தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும்.
* அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு.
* வானிலையை கணிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை அரசு உருவாக்கும். இதற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,714 கோடி ஒதுக்கீடு.
* சமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
* ஏழு வணிக நீதிமன்றங்கள் அமைக்க நிதி இந்த நிதியாண்டில் ஒப்புதல்.
* கூட்டுறவுத்துறைக்காக ரூ.4131 ஒதுக்கீடு.
* பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக 7500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* பாசனத்திற்காக நீரை தங்குதடையின்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காக ரூ.3,384 கோடி ஒதுக்கீடு.
* காவேரி பாசன பகுதிகளில் நீர் வழித்தடம் மற்றும் சீரமைப்பிற்கு ரூ.3384 கோடி ஒதுக்கீடு.
* விலங்குகளை பராமரிக்க அரசு சாரா நிறுவனங்களுக்கு உதவி செய்ய வள்ளலார் காப்பக திட்டம் உருவாக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு.
* தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும்.
* தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு. விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம்.
* நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
* தமிழ்வளர்ச்சி துறைக்கு ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு.
* தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
* குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச்சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கி.மீ. கால்வாய்கள் தூர்வார ஒப்புதல்.
* 15 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும்.
* டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு. இத்திட்டம் வரும் நிதியாண்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* புத்தகக் காட்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.
* அறிவுசார் நகரம் உருவாக்கப்படும்.
* ஆராய்ச்சிப் பூங்காக்கள் நிறுவ ஊக்குவிக்கப்படும்.
* அரசு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் கடமை.
* அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம்.
* அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம்.
* தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்க தேடல் திட்டம்.
* 19 அரசு மருத்துவமனைகளை, புதிய மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளாக மேம்படுத்த அரசு முடிவு.
* நாட்டில் மனநல மருத்துவர் பயிற்சி, மன நோய்க்கு சிகிச்சை கட்டமைப்பைப் பலப்படுத்துவது இன்றியமையாதது.
* கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநில மருத்துவமனை மனநல மாற்றம் உயர்ந்த அமைப்பாக மேம்படுத்திட அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும்.
* ரூ.125 கோடி செலவில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும்.
* தமிழக காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு.
* சென்னை ஆர்.கே.நகரில் புதிய விளையாட்டு வளாகம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும்.
* டான்செம் நிறுவனத்திற்கு ரூ.30 கோடி நிதி உதவி.
* சத்துணவுத்திட்டத்திற்கு ரூ.1949 கோடி ஒதுக்கீடு.
* சமூக நலத்துறைக்கு ரூ.5922.40 கோடி ஒதுக்கீடு.
* மாணவன் நல விடுதிகளில் ஆராய்ந்து சுகாதாரம், உணவு, தரம் பாதுகாப்பு கண்காணிப்பு ஆகியவற்றை மறுசீரமைக்க தேவையான பரிந்துரைகளை வழங்க உயர் மட்ட குழு.
* முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி நிதி ஒதுக்கீடு.
* முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு.
* 5.6 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை போன்று புத்தக காட்சி நடத்தப்படும்.
* தமிழர்களின் மரபை கொண்டாட கூடிய வகையில் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும்.
* புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் இரண்டு ஆண்டில் உயர்தர வசதிகளுடன் கூடிய மத்திய நூலகங்கள் அமைக்கப்படும்.
* உயர்தர வசதிகளுடன் கூடிய மத்திய நூலகங்கள் அமைக்கப்படும்.
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 17,901 கோடி நிதி ஒதுக்கீடு.
* அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்.
* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி.
* சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு.
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு.
* 6 புதிய கூட்டுறவு குடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.
* மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்தில் இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். வெளி வட்ட சாலையின் இருபுறமும் உணவகம் உள்ளிட்ட கடைகளும் உருவாக்கப்படும்.
* துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்துக்கு ரூ.5,770 கோடி ஒதுக்கீடு