» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கவில்லை: உச்சநீதிமன்றம் விளக்கம்
சனி 30, அக்டோபர் 2021 11:18:47 AM (IST)
அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கவில்லை; பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடா்பாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமா்வு கூறியதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின்படி, ஒவ்வொருவரும் சுகாதாரத்துடன் வாழ்வதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டம் என்ற மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளைப் பயன்படுத்தவும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறவும் யாருக்கும் அனுமதியில்லை.
அனைத்து வகை பட்டாசுகளுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. மக்களின் சுகாதாரத்துக்கு குறிப்பாக, குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களின் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சம்பந்தப்பட்ட துறையினரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மீறும் மாநிலங்கள் கடுமையான நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும்.
பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் ரசாயனம் கலந்த பட்டாசுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது தொடா்பான விவரங்களை அனைத்து மாநிலங்களும் மின்னணு, அச்சு ஊடகங்கள் வழியாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.