» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
சனி 23, மார்ச் 2024 9:53:14 AM (IST)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழி காட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முதன்முறையாக எழுதும் 200 மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் தன்னம்பிக்கை யூட்டும் நிகழ்ச்சி நடந்தது . தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை வகித்து வரவேற்றார்.ஆசிரியர் வின்ஸ்டன் ஜோஸ்வா ஆரம்ப ஜெபம் செய்தார். கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர் ஜெய்சன் பாபு எடுத்துரைத்தார்.
11 மற்றும் 12-ம் வகுப்புகளின் சிறப்புகள், அதன் தனித்தன்மை, பயன்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர் செல்வின் பொன்தாஸ் விரிவாக விளக்கினார்.மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் சிறப்பம்சங்கள், சிறந்த கல்விமுறை, அனைத்து வகையான விளையாட்டு பயிற்சிகள், நன்னெறி வாழ்க்கைக்கல்வி போதனைகள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், உயர்கல்விக்கான வழிகாட்டுதல் ஆகியவை குறித்து ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் எடுத்துக் கூறினார்.
தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள் குறித்து உதவி தலைமையாசிரியர் ஜெயசீலன் விளக்கி கூறினார். அரசு பொதுத்தேர்வு மாதிரி விடைத்தாள்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் அரசு தேர்வில் பயன்படுத்தக்கூடிய எழுது பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் நன்றி கூறினார்.ஆசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் இறுதி ஜெபம் செய்தார். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுதாகர், தலைமை ஆசிரியர் கென்னடி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.