» சினிமா » செய்திகள்
மதிப்பெண்கள் மட்டும் கல்வியாகாது - நடிகர் சூர்யா
திங்கள் 17, ஜூலை 2023 12:18:28 PM (IST)
நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இதில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு 25 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பரிசு வழங்கினார்கள். விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, "மனிதனுக்கு மிக முக்கியமானது கல்வி. கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள். வாழ்க்கை முழுவதும் கல்வியை படியுங்கள். சமூகத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. வெறும் மதிப்பெண்கள் மட்டும் கல்வியாகாது. கற்ற நற்பண்புகளுடன் இந்த சமூகத்தில் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்துவது என்பதை சொல்லித்தருவது தான் உண்மையான கல்வி. அந்த கல்வி சூழலுக்கு முக்கியமானவர்கள் ஆசிரியர்கள் தான்.
ஒரு வகுப்பில் 30 முதல் 40 குழந்தைகளை ஆசிரியர்கள் சமாளிப்பது மிகவும் சவாலான விஷயம். கடந்த மூன்று ஆண்டுகளாக அகரம் பவுண்டேஷன் அரசுடன் இணைந்து செயல்பட்டு ஒரு லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு சேர்த்துவிட்டுள்ளோம். இது பெருமையாக இருக்கிறது. அகரம் பவுண்டேஷனுக்காக தனி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
காலையில் எழுந்ததும் நல்ல விஷயங்களை செய்யுங்கள். கடவுளை பிரார்த்தியுங்கள். வீட்டு வேலை செய்யுங்கள். துணிமணிகளை மடித்து வையுங்கள். இப்படி நல்ல தொடக்கமாக அந்த நாளை தொடங்குங்கள். நான் இப்போதுதான் அதனை கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். இது போன்ற செயல்கள் அந்த நாளை சிறப்பானதாக மாற்றும். நல்ல எண்ணங்களை தோற்றுவிக்கும். இரவு வேகமாக நம்மை தூங்கச் செய்யும். நல்ல உணவு பழக்க வழக்கங்களை நமக்கு கற்றுத்தரும்” என்றார்
sathyaJul 19, 2023 - 09:48:54 PM | Posted IP 172.7*****